பத்தினம்திட்டா:
கேரளாவில் அரசு பேருந்து ஒன்று அதிவேகமாக கார் மீது மோதி விபத்துக்குள்ளாகிய சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தின் கீழவாளூர் பகுதி அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. அந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், கேரள அரசு பேருந்து சாலையில் வந்துகொண்டிருந்தபோது, கார் மீது மோதியவுடன் அங்கிருந்து கிறிஸ்துவ தேவாலய வெளிப்புறச்சுவர் மீது மோதியதில் தேவலாயத்தில் வளைவுச்சுவர் இடிந்து பேருந்தின் மீது விழுந்தது பதிவாகியுள்ளது. இவையனைத்தும் ஒரே சில மணித்துளிகளில் நடந்தது.

இந்த விபத்தில் மொத்தம் 16 பேர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இந்த விபத்து இன்று மதியம் 1.40 மணியளவில் நடந்துள்ளது. அந்த அரசு பேருந்து திருவனந்தரபுரத்தில் இருந்து பத்தனம்திட்டாவிற்கு வந்துகொண்டிருந்தது. பேருந்து அங்கு வந்துகொண்டிருந்த ஒரு காரை வேகமாக முந்திச்சென்றது. அப்போது, அதேபோன்று எதிர்பக்கத்தில் வேகமாக வந்த கார், பேருந்தின் மீது மோதியது. ஓட்டுநர் பேருந்தை சற்று திருப்பியதால், அது நேராக அங்கிருந்த தேவாலயத்தில் மோதியதாக தெரிகிறது.