சென்னை:
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதலமைச்சரை நாளை சந்திக்கிறார்.

டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதை எதிர்த்து ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என தீர்ப்பு வழங்கியது. அரசுக்கு அதிகாரம் வழங்கப்படாவிட்டால் மாநில அமைச்சர்கள் குழு உத்தரவை அதிகாரிகள் கேட்காத நிலை ஏற்படும் . மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்ள முடியாது என்றும் அறிவுறுத்தியது. இருப்பினும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ரத்து செய்யும் வகையில், மத்திர அவரச சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. நிர்வாக விவகாரங்களில் மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக ஆதரவு திரட்டி வரும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்தார்.

இந்நிலையில் சென்னையில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்கிறார். மத்திய அரசின் அவசர சட்டம் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் உள்ளதாக கூறி, அதை நிராகரிக்க ஆதரவு கோருகிறார்.