சென்னை:

ரகப்பகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், ஓட்டு எண்ணிக்கையை விழிப்புடன் கண்காணியுங்கள் என்று அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ஊரகபபகுதிகளுக்கான  உள்ளாட்சித் தேர்தல் கடந்த 27, 30ந்தேதிகளில் 2 கட்டங்களாக முடிவடைந்துள்ளது.  ஜனவரி 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையை அதிமுக முகவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்  முதல்வர் பழனிசாமி ஆகியோர்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2019 அ.தி.மு.க.வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வாக்கு எண்ணிக்கையின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்:-

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு 27.12.2019, 30.12.2019 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், 2.1.2020 அன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது.

இப்பணிக்காக, அ.தி.மு.க. சார்பில் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் கழக உடன்பிறப்புகள், மிகவும் கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று, கழகத்திற்கு அர்ப்பணிக்கும் வகையில் பின்வரும் அம்சங் களை நினைவில் கொண்டு பணியாற்றுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

வாக்கு எண் ணிக்கை நடைபெறும் நாளான 2.1.2020 அன்று, கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும், தங்களுடைய வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு காலை 6 மணிக்கே சென்றுவிட வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தும் முறைப்படி செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்திட வேண்டும்.

வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.பதிவான வாக்குகளும், எண்ணிக்கையில் காட்டப்படும் வாக்குகளும் ஒரே எண்ணிக்கையில் உள்ளனவா என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடியும் போதும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் எத்தனை வாக்குகள் கிடைத்துள்ளன என்பதை எழுதி வைத்துக்கொண்டு, அதை தேர்தல் அதிகாரியிடம் சரிபார்க்க வேண்டும். அதன் பின்னர் தான் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரேனும் மாற்றுக் கட்சியினருக்கு ஆதரவாகவும், முறைகேடாகவும் செயல்படுகிறார்களா என்பதை தீவிரமாகக் கண்காணித்து, குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வினைக்காண வேண்டும்.

தி.மு.க.வினர் தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் கை தேர்ந்தவர்கள் என்பதை இந்த நாடே நன்கு அறியும். இதற்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்லலாம். ஆகவே, வாக்கு எண்ணும் மையங்களில்

தி.மு.க.வினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை விழிப்போடு கண்காணித்து, அவ்வாறு ஏதேனும் நடைபெற முயற்சித்தால், அது சம்பந்தமாக மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வு காண வேண்டும்.

கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அங்கிருந்து வெளியில் வர வேண்டும்.

கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர் களுக்கென நியமிக்கப்பட்டுள்ள முதன்மை முகவர் தங்களுக்கான வாக்கு எண்ணும் மையங்களில், வாக்கு எண்ணும் பணி முறையாக நடைபெறுகின்றனவா என்பதை இறுதி வரையிலும் கண்காணிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி, அனைத்துப் பணிகளும் முறையாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.

அ.தி.மு.க. வெற்றியை உறுதி செய்யும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலை நாட்டப்படும் வகையிலும், அனைவரும் விழிப்புடன் இருந்து பணியாற்றுங்கள். இது, ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.