சென்னை,

கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்று தொல்பொருள் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் நடந்த தொல்லியல் அகழாய்வில் 2,000க்கும் மேற்பட்ட தொல்பொருட் கள் கிடைத்திருப்பதாக ஆய்வை நடத்திய மாநில தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது.  தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.

இங்கு 40-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும், சங்கத்தமிழ் ஆா்வலா்களும் தெரிவித்துள்ளனர்.

சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன.

இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில்,  கீழடி கிராமம் அகழ்வாராய்ச்சி குறித்து வரும் ’கீழடி’ என்ற நூலை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்  வெளியிட்டார். மேலும், தமிழகத்தில் இசைக்கருவி அருங்காட்சியகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அதுகுறித்து இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானிடம் பேசியுள்ளதாகவும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தொல்லியல் துறை சார்பில் உருவாக்கப்பட்ட செயலியையும் தொடங்கி வைத்தார்.

இவர் ஏற்கனவே  கீழடியில் மார்ச் 2020-ஆம் ஆண்டுக்குள் அருங்காட்சியகம் திறக்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.