சென்னை,

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார்.

காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்கள் இரண்டு பேர் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

காஷ்மீர் மாநிலம், பந்திபுர்-குரேஷ் பள்ளத்தாக்கில் 26ம் தேதி ஏற்பட்ட பனிச் சரிவில் இந்திய நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களான, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கிழக்கு கண்ணந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த சிப்பாய் இளவரசன், மதுரை மாவட்டம், திருமங்கல பல்லக்காப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிப்பாய் சுந்தரபாண்டி ஆகிய இருவரும் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் இளவரசன், சுந்தரபாண்டி ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பணியின் போது உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட கருணை தொகையை 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என 2.9.2016 அன்று சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன் அடிப்படையில் இறந்த இரண்டு ராணுவ வீரர்களினகுடும்பங்களுக்கு தலா இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.