சென்னை:

ஒரு வருடத்திற்கு பிறகு திமுக தலைவர் கருணாநிதி பொது நிகழ்ச்சிக்காக இன்று வீட்டை விட்டு வெளியே வந்தார்.

 

முதுமையாலும் உடல்நலக்குறைவாலும் கடந்த ஒரு வருடமாக கருணாநிதி எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. கடந்த டிசம்பர் மாதத்தில் தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக காவேரி மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சைபெற்றார். பிறகு டிரக்யாஸ்டாமி சிகிச்சை நடந்தது.

அதன் பிறகு கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்தார். மருத்தவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்துவந்தார். அவருக்கு கொண்டாடப்பட்ட வைரவிழா, முரசொலி பவள விழா உட்பட என எந்தவொரு விழாவிலும் கலந்துகொள்ளவில்லை. முக்கியபிரமுகர்கள் சிலர், அவரை வீட்டில் சந்தித்து வந்தனர்.

இந்த நிலையில் மருத்துவ காரணம் இன்றி முதல் பொது நிகழ்ச்சியாக முரசொலி நாளிதழ் அலுவலகத்தை பார்வையிட இன்று கருணாநிதி வீட்டை விட்டு வெளியே வந்தார். கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில், நடைபெறும் பவள விழா கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

அப்போது திமுக செயல் தலைவர் ஸ்டாலின், எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள். கருணாநிதியின் வருகை திமுக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது