திமுக தலைவர் மு. கருணாநிதி உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சைபெற்றுவருவதாகவும் அதனால், அவரைப் பார்க்க வருவதைத் தவிர்க்க வேண்டுமென்றும் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி திமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டது.
இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை 5.50 மணியளவில் தனது கோபாலபுரம் இல்லத்திலிருந்து புறப்பட்ட கருணாநிதி ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடன் ராஜாத்தி அம்மாள், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் உடன் சென்றனர்.
கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக காவெரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்துக் குறைவுக்காக கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சைபெறுவார் என்றும் அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.
உடல்நலக் குறைவின் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை கருணாநிதி தவிர்த்து வந்தார்.