சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில்  நினைவிடம் அமைப்பது என்ற அறிவிப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது; என் தந்தை தீவிரமான கருணாநிதி பக்தர் அவருடைய பெட்டியில் மனோகரா பராசக்தி கதைகள் இருக்கும் என எதிர்க்கட்சித் துணைத்தலைவர்  ஓ.பி.எஸ் புகழாரம் சூட்டினார். ஓபிஎஸ்-சின் அளவுக்கு மீறி புகழாரம் சட்டமன்ற உறுப்பினர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

இன்று சட்டப்பேரவை தொடங்கியதும்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110ன் கீழ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில்   நினைவிடம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவையில் பேசிய vதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்,  கலைஞர் நினைவிடம் குறித்த அறிவிப்பை அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்க கடமைப்பட்டுள்ளோம். வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கை வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி. வரலாற்றில் கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கும். இந்த அறிவிப்பை முழுமனதோடு ஒருமனதாக வரவேற்கிறோம்.

50 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி; பல்வேறு சிறப்பு மிக்க சட்டங்களை கொண்டு வந்தவர். சமுதாயத்தை சீர் திருத்தும் கருத்துக்கள் அடங்கியதுதான் கலைஞர் எழுத்துக்களால் உருவான பராசக்தி படம் என தெரிவித்தார். என் தந்தை தீவிரமான கலைஞரின் பக்தர். அவருடைய பெட்டியில் மனோகரா பராசக்தி கதைகள் இருக்கும். அவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பார். அவர் இல்லாத நேரத்தில் நாங்கள் எடுத்து படித்துள்ளோம்.

இவ்வாறு ஓபிஎஸ் பேசினார்.

முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ந் தேதி மறைந்ததை அடுத்து அவரது உடல் சென்னை ராஜாஜி அரங்கத்தில் பார்வையாளர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கு அப்போதைய அதிமுக அரசால் இடம் தர மறுக்கப்பட்டது. பின்னர் இழுபறிக்கு பின்னரே, அவரது உடல் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நினைவிடத்துக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்ய எடப்பாடி அரசு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.