பெங்களூரு

ர்நாடக மாநில அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்துக்கு நீர் திறக்க ஒரு மனதாக மறுத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை நம்பியே சாகுபடி செய்து வருகிறார்கள். கடந்த ஜூன் 12-ந் தேதி டெல்டா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.  நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைக் கர்நாடகம் வழங்காததால் காவிரி டெல்டா பகுதியில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் கருகின. விவசாயிகள் கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் சேதம் அடைந்ததால் கவலை அடைந்தனர்.

பிரதமர் மோடிக்குக் காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரைத் திறந்து விடுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.  காவிரி ஆணைய கூட்டத்திலும் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். கர்நாடக அரசு காவிரி ஆணைய உத்தரவின்படி, காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன.

கடந்த 8 ஆம் தேதி நீர் இருப்பு குறைந்ததாகக் கூறி தண்ணீர் திறப்பைக் கர்நாடக அரசு திடீரென நிறுத்தியது. ஆகவே காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. காவிரி விவகாரம் தொடர்பாகக் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாது என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சி நிலவுவதாலும் மழை பற்றாக்குறையாலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும் கர்நாடகத்தின் தேவையை பூர்த்தி செய்யவே 70 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுவதாகவும்  53 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளதால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடக்கூடிய சூழல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவிடம் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.