பெங்களூரு:  கர்நாடக மாநிலத்தில் தேர்வு எழுதும் மாணவிகள் ஹிஜாப் உள்பட  தாங்கள் விரும்பும் ஆடைகளை அணிந்து தேர்வு எழுதலாம் என கர்நாடகா காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதை மாநில  கல்வித்துறை அமைச்சர் சுதாகர் உறுதிப்படுத்தி உள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, கல்வி அமைச்சர் சுதாகர் தலைமையில் நடந்த முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாணவர்கள் தேர்வு எழுதும் போது ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது. தேர்வு எழுதும் மாணவிகள் தாங்கள் விரும்பும் ஆடைகளை அணிந்து தேர்வு எழுதலாம். அனைத்து தரப்பினரின் சுதந்திரத்தையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா அமைச்சர் எம்.சி.சுதாகர் கூறினார்.

கர்நாடக மாநிலத்தில், இஸ்லாமிய மாணவிகள்  ஹிஜாப் அணிந்த வந்து தேர்வு எழுத முயற்சித்த  விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது. ஏற்கனவே அங்கு ஹிஜாப் போன்ற மத அடையாளங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதை மீறி  கடந்தாண்டு ஜனவரியில் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு இந்த விவகாரம் கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையாக மாறியது. இது தொடர்பாக இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் சிலர் காவி துண்டு அணிந்து கல்லூரிக்குச் செல்ல தொடங்கினர். இதனால் அங்கே பதற்றம் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் விசாரணை முடிந்தும் தீர்ப்பு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இறுதியில் மாணவிகள் உரிய சீருடை விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கர்நாடக அரசும், கர்நாடக உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டு, அது அமலில் உள்ளது.

இந்த நிலையில்,  கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் காங்கிரஸ் அரசு மீண்டும் ஹிஜாப் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா, மாநில கல்வி அமைச்சர் எம்.சி.சுதாகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாணவிகள் தேர்வு எழுதும் போது ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய கல்வி அமைச்சர் சுதாகர்; ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதும் விவகாரத்தில் சிலர் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்த முயல்கிறார்கள். இந்த விவகாரத்தில் சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். இப்போது அனைத்து தரப்பினரின் சுதந்திரத்தையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் அணிந்து நீட் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படுகிறது. தேர்வு எழுதும் மாணவிகள் தாங்கள் விரும்பும் ஆடைகளை அணிந்து தேர்வு எழுதலாம்” என்று   தெரிவித்தார்.

பள்ளிகளில், மாணவ மாணவிகளிடையே சாதிமத வேறுபாட்டை  களைய   ‘ஒரே  சீருடை’ திட்டத்தை அமல்படுத்தியவர் காமராஜர். ஆனால், அதன்பிறகு மாநிலங்களை ஆண்ட ஆட்சியாளர்களார், தங்களது அரசியல் ஆதாயத்துக்காக, மக்களிடையே சாதி மத வேறுபாட்டை ஊக்குவித்து, அதன்மூலம் குளிர்காய்ந்து வருகின்றனர்.  காமராஜர் வழியில் வந்த காங்கிரஸ் கட்சியே. இன்று  பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் சாதி, மத வேறுபாட்டை வளர்க்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது.

சாதிமத வேறுபாட்டை களைய பள்ளிகளில் ‘ஒரே  சீருடை’ திட்டம், ‘முதியோர் பென்ஷன்’ உள்பட பல திட்டங்களை அமல்படுத்தியவர் காமராஜர்!