சென்னை; காரல் மார்க்ஸ் பற்றி கவர்னர் ஆர்.என்.ரவி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல, முறையுமல்ல என்று கூறிய  அமைச்சர் க.பொன்முடி

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, காரல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைக்க வேண்டும் என கட்டுரை எழுதினார் என்றும், காரல் மார்க்ஸ் சிந்தனை இந்தியாவை சிதைத்தது என்றும் நேற்று முன்தினம் சென்னை ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று அறிக்கை  வெளியிட்டுள்ளார். அதில்.  மனிதர்களைப் பிறப்பால், சாதியால், நிறத்தால், பாலினத்தால், பணத்தால் என எந்த வகையிலும் பாகுபடுத்திப் பார்க்காமல் அவரவருக்கான உரிமைகளையும், வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என்கிற பரந்த மானுடப்பார்வை கொண்ட பொதுவுடைமை கருத்தியலை வழங்கியவர் காரல் மார்க்ஸ்.

பத்தாம்பசலி சிந்தனைகளுடன் வருணபேதத்தை பாதுகாக்க நினைப்போருக்கு காரல் மார்க்ஸ் கொள்கைகள் கசப்பு மருந்துதான். அதை விழுங்க முடியாமல் வாந்தி எடுப்பதுபோல கவர்னர் பேசுவது அவர் வகிக்கும் பதவிப்பொறுப்புக்கு அழகல்ல. முறையுமல்ல!.

ஒரு கட்சியின் சார்பில் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் அளித்த கோரிக்கையை டிவிட்டர் பக்கத்தில் வெளியிடும் ராஜ்பவன்,

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரலாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள ஆன்லைன் சூதாட்டத்தடை மசோதாவின் நிலை என்ன? என்பதை எப்போது வெளியிடப்போகிறது? கிடப்பில் உள்ள மற்ற மசோதாக்களை பற்றி என்ன சொல்லப்போகிறது?.

ஆர்.என்.ரவியை கவர்னர் பதவிக்கு பரிந்துரைத்த பா.ஜ.க.வின் உள்நோக்கமிக்க அரசியல் செயல்பாடுதான் சென்னையில் முன்னாள் ராணுவ வீரர்கள் சிலரை பங்கேற்கச் செய்த ஆர்ப்பாட்டம் ஆகும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில் குடிதண்ணீர் பிடிக்கும் இடத்தில் குடும்பத்தினரிடையே நடந்த வாய்த்தகராறு முற்றியதில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் ராணுவ வீரர் பிரபு என்பவர் தாக்கப்பட்டு மரணமடைந்தார்.

இது தொடர்பாக உடனடியாக காவல்துறையால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்டவர் கைதும் செய்யப்பட்டிருக்கிறார் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் ஆளுங்கட்சி கவுன்சிலராக இருக்கிறார் என்பதைத்தவிர, குடும்பரீதியான இந்த தகராறில் அரசியல் சார்ந்த பிரச்சினைகள் துளியும் கிடையாது.

ஆனால், தேசபக்தியையும் அரசியல் வியாபாரப் பொருளாக்கிவிட்ட பா.ஜ.க. சார்பில் உள்நோக்கத்துடன் இந்த விவகாரம் ஊடக விளம்பரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. அதன் பெயரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு, வலிந்து கொண்டு வரப்பட்ட முன்னாள் ராணுவவீரர் ஒருவர், ”தமிழ்நாட்டில் வெடிகுண்டு வைக்கும் சூழல் வரும், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலைமையை உருவாக்குவோம்” என பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசவைக்கப்பட்டுள்ளார்.

இத்தகைய அரசியல் கண்ணோட்டங்களை புறந்தள்ளி, சட்டரீதியான உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசின் காவல்துறை மேற்கொண்டுவரும் நிலையில், கவர்னர் மாளிகையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அரசியல் பார்வையுடன் பதிவுகளை இடுவது என்பது உள்நோக்கம் கொண்ட விஷமத்தனமான செயலன்றி வேறில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

அரசியல் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பதவியினை வகிக்கும் கவர்னர் ரவி, அந்த பொறுப்புக்குரிய மாண்பை பற்றி சிறிதும் கவலைப்படாமல் சிறுபிள்ளை விளையாட்டு ஆடிக்கொண்டிருப்பது அரசியல் சட்டத்தை அவமதிக்கும் செயல்.

தனக்கான விளம்பரத்திற்காகவும், தன்னை பதவியில் நியமிக்க பரித்துரைத்தவர்களின் விருப்பத்திற்காகவும், உலகத்தலைவர்களையும், தமிழ்நாட்டின் மாண்புகளையும் சிதைக்கும் வகையில் செயல்படுவதையும், அரசியல்வாதிபோல் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதையும் உடனடியாக நிறுத்திக்கொண்டு, வேலை என்னவோ அதில் கவனம் செலுத்துவதே, மக்களின் கவர்னருக்குரிய வரிப்பணத்தில் அவர் பெறும் ஊதியத்திற்கு உண்மையானதாக இருக்கும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.