சென்னை:
ஹெச்.ராஜா மீது புகாரளித்த காரைக்குடி பாஜக நகர தலைவர் சந்திரன் பாஜகவிலிருந்து நீக்கம் செய்யபட்டுள்ளார்.

எச்.ராஜா கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வி அடைந்தார். தொடர்ந்து நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட எச்.ராஜா மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியிடம் தோல்வி அடைந்தார்.

இதையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கட்சி நிர்வாகிகள் சிலர் தேர்தலில் வேலை செய்யவில்லை என்றும் மேலும் கட்சி நிர்வாகிகளுக்கு கொடுத்த பணத்தை முறையாக பட்டுவாடா செய்யாததால் தான் தனது தோல்விக்கு காரணம் என எச்.ராஜா பேசியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் கட்சி நிர்வாகிகளிடம் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த பாஜக காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு ஒன்றியத் தலைவர் பாலா, கண்ணங்குடி ஒன்றிய தலைவர் பிரபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் மாவட்டத் தலைவர் செல்வராஜிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தனர்.

காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன் தனது ராஜினாமா கடித்தத்தில், எச்.ராஜா தனது தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆராயமலும், சுயபரிசோனை செய்து கொள்ளாமலும், தான் செய்த தவறை மறைப்பதற்காக எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில். பாஜக நகர தலைவர் சந்திரன் பாஜகவிலிருந்து நீக்கம் செய்யபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.