சென்னை

பிரதமர் மோடிக்கு மேடையில் எங்கள் பெயரைச் சொல்லக் கூட மனமில்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்.கனிமொழி கூறியுள்ளார்.

 

இன்று சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர்,

”திமுக அரசு குலசேகரப்பட்டினம் திட்டம் கொண்டு வர பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்தது. இன்று நடந்த குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா திமுக அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். 

மேலும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் கால்வாசிதான் மத்திய அரசு நிதி வழங்குகிறது. மீதி  முக்கால்வாசியை  மாநில அரசு தான் நடைமுறைப்படுத்துகிறது. தமிழகத்துக்கு பிற மாநிலங்களில் இருந்து வந்து இத்திட்டத்தைப் பார்வையிடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘இதை ஏன் முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டம் எனக் குறிப்பிடப்படவில்லை’ எனக் கேள்வி எழுப்புகின்றனர். 

மத்திய அரசு மாநில அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. திமுக எப்போதும் நல்ல திட்டங்களை எதிர்ப்பதில்லை. பாஜகவினர் தேர்தல் நேரம் என்பதால் திட்டங்களை அறிவித்துள்ளார்கள். ஆனால் தமிழக முதல்வரின் ஒரு  கோரிக்கையைக் கூட மத்திய அரசு நிறைவேற்றவில்லை. விரைவில் தி.மு.க. அழியும் எனச் சொன்னவர்கள் பலரும் காணாமல் போயுள்ளனர். 

மாநில அரசு தான் குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு நிலத்தை வழங்கியது. ஆயினும் மேடையில் எங்களது பெயரைச் சொல்லக் கூட பிரதமருக்கு மனமில்லை  அது முதல்வரின் கனவுத் திட்டம் என்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்றோம்.தமிழக மக்கள் அரசியல் வேறு, மதம் வேறு என்பதை உணர்ந்தவர்கள். மக்கல் தமிழகத்தின் உரிமைகளுக்காகப் போராடும் இயக்கம் தி.மு.க. என்பதை அறிவர்.” 

என்று கூறினார்.

PM Modi, Stage, DMK Name, not mentioned, Kanimozhi,