கோயம்புத்தூர்

ட்டுநர் ஷர்மிளாவுக்கு வேறு பணி அளிப்பதாக கனிமொழி உறுதி அளித்துள்ளார்.

கோயம்புத்தூரை சேர்ந்த ஷர்மிளா வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கோவை நகரின் முதல் பெண் ஓட்டுநரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைத்தளங்களிலும் ஓட்டுநர் ஷர்மிளா பிரபலமாகி வருகிறார்.

இன்று தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் மேற்கொண்டார். கனிமொழி காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பேருந்தில் பயணம் செய்தபோது ஷர்மிளாவுக்கு. தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.  சிறிது நேரம் அவருடன் பேருந்தில் பயணித்தபடியே பேசி சென்றார்

கடந்த மூன்று மாதங்களாக பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார். ஷர்மிளா விளம்பரத்திற்காகப் பயணிகளை ஏற்றுவதாகத் தனியார் பேருந்து உரிமையாளர் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து  ஷர்மிளா தனது பணியை ராஜினாமா செய்து உள்ளார்.

ஷர்மிளா பணியில் இருந்து நீக்கப்பட்டதை அறிந்து தொலைப்பேசியில் ஷர்மிளாவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியுள்ளார். அப்போது ஷர்மிளாவுக்கு வேறு பணி உள்ளிட்ட தேவையான உதவிகளை அளிப்பதாக  கனிமொழி உறுதி அளித்துள்ளார்.