பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் பிரபலங்களுக்கு இடையே கருத்து மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நடிகை கங்கணா, கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்‌ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி அபூர்வா மேத்தா உள்ளிட்டோருக்கு மும்பை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதற்கு முன் கரண் ஜோஹரின் மேலாளர் ரேஷ்மா ஷெட்டியின் வாக்குமூலத்தையும் போலீஸார் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரண் ஜோஹருக்கு சம்மன் அனுப்பப்படாததைக் கண்டித்து கங்கணாவின் சமூக வலைதளக்குழுவின் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. அதில், ”கரண் ஜோஹரின் மேலாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஆதித்யா தாக்கரேவின் நெருங்கிய நண்பரான கரண் ஜோஹருக்கு இன்னும் அனுப்பப்படவில்லை. சுஷாந்த் கொலை விவகாரத்தில் விளையாடுவதை மும்பை காவல்துறை நிறுத்தவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.