ருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோவில், சென்னையின் குன்றத்தூரில் அமைந்துள்ளது.

பெரிய புராணம் எனும் மகத்தான நூலை அருளிய சேக்கிழார் வைகை நதிக்கரைத் தெய்வங்களை வணங்கிவிட்டு, காவிரிக்கரையில் உள்ள கடவுளர்களை தரிசித்துவிட்டு, பாலாற்றங்கரையில் அருளும் இறைமூர்த்தங்களையும் பிரார்த்தித்துவிட்டு, குசஸ்தலை நதி பாயும் ஊரை நெருங்கினார். வழியில், அற்புதமான சிவாலயத்தைக் கண்டார். அது சோழ மன்னனால் கட்டப்பட்ட கோவில். வாழையும் தென்னையும் அதிகம் பயிராகும் பூமி அது. மலையும், குளிரும் கைகோர்த்த மண்டலம் அது. மலையின் அடிவாரத்தில் உள்ள இறைவனைத் தரிசித்து, அங்கேயே சில காலம் தங்கி தவம் செய்வது என்று முடிவு செய்தார் அந்தச் சிவனடியார். பிரமாண்டமான சிவலிங்கமூர்த்தத்தின் சாந்நித்தியத்தில் தன்னை இழந்தார். தனது சிந்தனைகள் முழுவதையும் சிவபாதத்துள் குவித்து சமர்ப்பித்தார். தன்னையே சிவனாரிடம் ஒப்படைத்தார். இதைத்தான் சரணாகதி என்கின்றனர்.

ஒரு நாள் அந்த அடியாருக்கு அற்புத தரிசனம் அளித்தார் சிவபெருமான். அந்தக் கணமே தனது மொத்த கர்வமும் தொலைந்ததை உணர்ந்த அடியவர், மெய்சிலிர்த்துப் போனார். என் கர்வத்தையும் செருக்கையும் அழித்த கந்தழீஸ்வரா என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். பரவசத்தில் திளைத்தார். “கந்துதல்” என்றால் “பற்றுதல்” என்று அர்த்தம். புகழையும் பெயரையும் பற்றிக்கொண்டிருந்த தனது பற்றுகளை நீக்கியதால், சிவனாருக்கு “கந்தழீஸ்வரர்” எனத் திருநாமம் சூட்டி மகிழ்ந்தார்.

சதுரவடிவ ஆவுடையாரில் பிரமாண்டமாக லிங்கதிருமேனியராக அருள்பாலிப்பது சிறப்பு. இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.

இக்கோவில் அருகே சேக்கிழாருக்கென தனிக்கோவில் உள்ளது. சென்னை பல்லாவரத்தில் இருந்து பம்மல், அனகாபுத்தூர் வழியாகச் சென்றால், குன்றத்தூர் எனும் அழகிய ஊரை அடையலாம். சிறிய மலை மீது கோவில் கொண்டிருக்கிறார் முருகப் பெருமான். மலையடிவாரத்துக்கு அருகிலேயே கந்தனின் மாமனான திருமால், ஊரகப்பெருமாள் என்ற திருநாமத்துடன் கோவில் கொண்டுள்ளார். அதையடுத்து சிவபெருமானின் கந்தழீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.