மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையை நடிகர் சூர்யா எதிர்த்து பேசிய நிலையில், அவருக்கு தனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில், “ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ / மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள். எனவே கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவுக்கு உண்டு.

புதிய கல்விக் கொள்கை குறித்து தம்பி சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு.

மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு, வெளியிடப்பட்டிருக்கின்ற “வரைவு அறிக்கை” மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப்போக்கினை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கின்றது.

தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு” என்று தெரிவித்துள்ளார்