சென்னை

க்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமலஹாசன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமலஹாசன் சமீபத்தில் அமெரிக்கப் பயணம் முடிந்து நாட்டுக்குத் திரும்பினார்.  அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு மருத்துவமனையில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டார்.   அவர் விரைவில் குணமடைய முதல்வர் மு க ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

கமலஹாசன் இன்று குணமடைந்து மருத்துவனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார்.   இதையொட்டி சமூக வலைத் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே  நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ”அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்னும் பெயரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மருத்துவமனை வாசம் முடித்து இன்று பணிக்குத் திரும்பினேன். நலமாக இருக்கிறேன். என்னுடைய விடுப்பை திறம்பட சமாளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் விக்ரம் படக்குழுவினருக்கும் என் நன்றிகள்.

நான் விரைந்து குணமடைய வேண்டுமென ஆலயங்களில், தேவாலயங்களில், மசூதிகளில் பூஜைகள், பிரார்த்தனைகள், தொழுகைகள் நடத்தியும், நேர்த்திக்கடன்கள் செய்தும், அன்னதானம், ரத்ததானம் உள்ளிட்ட நற்பணிகளிலும் ஈடுபட்ட என்னுடைய ரசிகர்கள், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள், என்னை தன் வீட்டில் ஒருவனாகக் கருதி எனக்காக கண்கலங்கி தங்கள் பிரார்த்தனையில் எனக்காகவும் வேண்டிக்கொண்ட லட்சக்கணக்கான தமிழக மக்களுக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.

பிரார்த்தனைகளுக்குப் பலன் உண்டா என்று எனக்குத் தெரியாது. ஆனால் உங்கள் அன்பின் வலிமையை அறிந்தவன் நான். உங்கள் தூய பேரன்பல்லவா என்னைக் கொரோனாவிலிருந்து கரை சேர்த்திருக்கிறது” 

என்று குறிப்பிட்டுள்ளார்.