அருள்மிகு காமாக்யாதேவி திருக்கோயில்,  தி காமாக்யா டெப்யூட்டர் போர்டு,  காமாக்யா டெம்பிள் காம்ப்ளக்ஸ்.  கவுகாத்தி
மன்மதனை(காமன்) சிவபெருமான் எரித்த இடமாதலாலும், காமன் தனது சுயரூபம் பெற்ற பிறகு விசுவகர்மாவைக் கொண்டு கட்டிய கோயில் என்பதாலும் இந்த இடம் “காமரூப்‘ என அழைக்கப்படுகிறது.
சக்தி பீடங்கள் 51 என நூல்கள் சொல்கின்றன. அதில் இத்தலம் முதல் தலமாகும். இந்த பீடங்களில் யோனி பீடம் அசாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா ஆகும்.
அசாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் நீலாசல் என்ற மலை அமைந்திருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் இந்த மலை மீது காமாக்யாதேவியின் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. புராணங்களில் இந்த இடம் நரகாசுரனால் ஆளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த மலை அடிவாரத்தில் நான்கு பக்கங்களிலும் சொர்க்கபுரி வாயில், அனுமன் வாயில், புலிவாயில், சிங்கவாயில் என்ற நான்கு நுழைவு வாயில்களை நரகாசுரன் அமைத்திருந்தான்.
பத்தாம் நூற்றாண்டில் இக்கோயில் அசாம் மன்னர்களால் சீர்திருத்தப்பட்டது. 1665ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. வெளிப்பிரகாரத்தைப் பார்த்தால் மட்டுமே கோயில் என்று இதை சொல்ல முடியும். உள்ளே சென்றால் ஒரு குகை மட்டுமே இருக்கிறது. அதற்குள் பத்து படிக்கட்டுகள் கீழே இறங்க வேண்டும். உள்ளே இருளாக இருக்கும். மின் விளக்குகள் கிடையாது. மிகவும் பொறுமையுடன் குகையின் சுவரை பிடித்துக்கொண்டு தட்டுத்தடுமாறி கீழே இறங்க வேண்டும். பாதாளத்தில் கருவறை அமைந்துள்ளது. அங்கே ஒரே ஒரு எண்ணெய் விளக்கு மட்டும் எரிகிறது. அந்த வெளிச்சத்தில்தான் காமாக்யாவுக்கு பூஜை நடத்தப்படுகிறது.
கருவறை அமைப்பு:
கருவறையில் சிறிய மலைப்பாறை போன்று ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதை “மேரு வடிவம்” என்கிறார்கள். மேடையைச் சுற்றிலும் தண்ணீர் வலமாக போய்க்கொண்டிருக்கிறது.
தண்ணீருக்கு அடியில் யோனிபீடம் அமைந்துள்ளது. அங்குள்ள பூசாரி பக்தர்களின் கையைப் பிடித்து பீடத்தின் மீது வைத்து தேவியை வணங்கச் சொல்கிறார். தலை மேடைமீது படும்படி பக்தர்கள் வணங்குகின்றனர்.
கருவறையிலேயே உயிர்ப்பலி கொடுக்கின்றனர். பலி கொடுத்த ஆடு, கோழி போன்றவற்றின் தலைகள் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. இந்த யோனிபீடத்தை தொட்டு தரிசனம் செய்ய வேண்டுமானால் பண்டாக்களை(துணை பூசாரிகள்) அணுக வேண்டும். மேடையின்கீழ் ஓடும் தண்ணீரை “சவுபாக்யகுண்ட்‘ என்று அழைக்கிறார்கள்.
குகையிலிருந்து வெளியேறும்போது உலோகத்தால் செய்யப்பட்ட காமேசுவர காமேசுவரி சிலைகள் எட்டுவித அமைப்பில் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளதைக் காணலாம்.
பிரகாரத்தில் காமாக்யாதேவி, “தசமகா வித்யா‘ என்ற பெயரில் பத்துவித தோற்றங்களுடன் காட்சி தருகிறாள். பிரகாரச் சுவர்களில் மங்கள சண்டி, அன்னபூரணி, நீலகண்ட மகாதேவ், மானசாதேவி ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இத்தலத்தின் மறுகரையில் “மயில்மலை‘ அல்லது “பஸ்மாசலமலை‘ எனப்படும் சிறிய குன்று இருக்கிறது. இங்கு தான் சிவனின் தவத்தைக் கலைத்த மன்மதனை எரித்த “காமதகனம்‘ நடந்ததாக சொல்லப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் “உமானந்த சிவா‘ கோயில் ஒன்றும் இருக்கிறது. இவரை தரிசித்து விட்டு, அருகிலுள்ள அனுமன் கோயிலுக்கு செல்ல வேண்டும். இதன்பிறகே காமாக்யாவின் குகைக்கோயிலுக்கு செல்வார்கள். சென்று திரும்பும்போது, காளிதேவி தன் பரிவாரங்களுடன் சுடலையில் (சுடுகாடு) காட்சி தருவதை தரிசிக்கலாம்.
“மாயா, காளி, மாரி என்ற பெயர்களைக் கொண்டவளும், பசி, தாகம், தூக்கம், ஆசை ஆகியவற்றை வெற்றி கொண்டவளும், நிகரற்ற வீரியம் படைத்தவளும், தன்னை எவரும் மீறமுடியாமல் காலத்தை கடந்து நிற்கும் காலராத்ரி தேவியே! எங்களுக்கு அருள்செய்” என்று வேண்டுகின்றனர்.
கவுகாத்தியில் தாரா, பைரவி, புவனேசுவரி ஆகியோருக்கு கோயில்கள் அமைந்துள்ளன.
அருகிலுள்ள ஹஸ்தகிரி என்ற இடத்தில் சுக்ராச்சாரியார் வழிபட்ட சுக்ரேசுவரர் கோயில் அமைந்துள்ளது.
நரகாசுரனை வதம் செய்த கிருட்டிணனுக்கு “அஷ்வகிரந்தா” என்ற இடத்தில் கோயில் இருக்கிறது. மேலும் நவக்கிரகங்களுக்கென தனி ஆலயமும், சூரியனுக்கு மட்டும் தனியாக ஒரு கோயிலும் உள்ளன.
கோரிக்கைகள்:
திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க இறைவனை வேண்டுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்குத் திருமுழுக்காட்டு செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.