சினிபிட்ஸ்:

விஜய் மில்டன் இயக்கத்தில் ராஜகுமாரன் நடித்துள்ள கடுகு படத்தின் ஆடியோ வெளியீடு விழா மிகவும் வித்தியாசமான முறையில் நடைபெற்றது.

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் கடுகு என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் இயக்குநர் ராஜகுமாரன் நடித்துள்ளார். படத்தின் வித்தியாசமான டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இந்தப்படத்தை நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் வெளியிடுகிறது.படத்தின்  ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் பரத், நடிகை சுபிக்ஷா, இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சூர்யா பாடல்களை வெளியிட சமூக சேவைகள் செய்துவரும் ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை, போக்குவரத்து காவலர் குமார் மற்றும் கருணைவேல் – சொர்ணலட்சுமி தம்பதி பெற்றுக்கொண்டனர்.

ஆடியோவை வெளியிட்டு பேசிய நடிகர் சூர்யா, இது போன்ற நல்ல படங்களை 2டி நிறுவனத்தின் கீழ் வெளியிடுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். ரசிகர்களுக்கு படங்களை கொண்டு செல்லவேண்டும் என்று தான் 2டி நிறுவனத்தை தொடங்கியதாக  அவர் கூறினார்.

ஆடியோவை பெற்றுக்கொண்ட ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை ஆட்டோவில் வைஃபை வசதியை ஏற்படுத்தி  வாடிக்கையாளர்களை கவர்ந்தவர். போக்குவரத்து காவலர் குமார், நடன அசைவுகள் மூலம் பொதுமக்களை கவர்ந்து போக்குவரத்தை சரி செய்பவர். இதே போல் கருணைவேல்- சொர்ணலட்சுமி தம்பதி, ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர்கள். வீட்டில் ஹோட்டல் நடத்திவரும் இவர்கள், சாப்பிட வருபவர்களிடம் பணம் வாங்குவதில்லை. அவர்கள் விரும்பும் தொகையை கொடுத்துவிட்டு போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.