ஹைதராபாத்:
மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார். அவருக்கு வயது 93.

பிரபல இயக்குநர் கே விஸ்வநாத், தமிழில் நடிகர் கமலஹாசன் நடித்த சலங்கை ஒலி, சிற்பிக்குள் முத்து, உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இழப்பு ஒட்டு மொத்த திரையுலகையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. தெலுங்குத் திரைப்படத்துறையில் எண்ணற்ற படங்களில் இயக்கியும் நடித்தும் உள்ளார்.

தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கே.விஸ்வநாத் இயக்கத்தில் உருவான சங்கராபரணம்(1979), சலங்கை ஒலி (1983), சிப்பிக்குள் முத்து (1985) போன்ற முத்தான திரைப்படங்கள் என்றென்றும் அவரது புகழை பரப்பும் இந்தியத் திரைப்படங்கள் ஆகும். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்படத் துறையில் கே. விஸ்வநாத் ஆற்றிய பணிகளைப் பாராட்டி, இந்திய அரசு அவருக்கு தாதாசாகெப் பால்கே விருது வழங்கி கெளரவித்தது.

பத்மஸ்ரீ விருது, தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். எட்டு முறை நந்தி விருது, ஆறு முறை தேசிய விருது, ஒன்பது முறை ஃபிலிம் பேர் விருதை பெற்றுள்ளார்.

1965 ஆம் ஆண்டு, ‘ஆத்ம கௌரவம்’ என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கே.விஸ்வநாத், தன்னுடைய முதல் படத்துக்கே சிறந்த அறிமுக இயக்குனர், மற்றும் சிறந்த படத்திற்கான நந்தி விருதை பெற்றார்.

பல தமிழ் படங்களிலும் நடித்துள்ள மறைந்த இயக்குநர் கே விஸ்வநாத், தான் சிறந்த இயக்குநர் மட்டுமல்ல, தலைசிறந்த நடிகர் என்பதை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் நிரூபித்தார். அந்த வகையில் நடிகர் கமலஹாசன் நடித்த ‘குருதி புனல்’, அஜித்துடன் ‘முகவரி’, பார்த்திபன் நடித்த ‘காக்கைச் சிறகுகளே’, விஜய் நடித்த ‘பகவதி’ நயன்தாரா மற்றும் தனுஷ் நடித்த ‘யாரடி நீ மோகினி’ என அண்மைக்காலம் வரை பல தமிழ்ப் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

பன்முகத் திறமைகள் கொண்ட கே விஸ்வநாத் அவர்கள், ஆடியோகிராபர், ஸ்க்ரீன் பிளே ரைட்டர், என பன்முக திறமையோடு விளங்கியவர்.

அவர், வயது மூப்பு காரணமாக, கடந்த சில காலமாகவே, சினிமாவிலிருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வு எடுத்து வந்த நிலையில், தனது ஐதராபாத் இல்லத்தில் கே.விஸ்வநாத் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.