தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. மே 2 நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணிக் கட்சியினர் 159 இடங்களைக் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 7) காலை தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தியும், பாராட்டியும் நடிகர் மற்றும் இயக்குநர் கே.பாக்யராஜ் கடிதம் எழுதியுள்ளார்.

“மரியாதைக்குரிய தமிழக முதல்வர் உயர்திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மற்றும் தங்களுடன் பொறுப்பேற்கும் அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பணிவன்பான வணக்கத்துடனும், வாழ்த்துக்களுடனும் உங்கள் பாக்யராஜ் எழுதுவது.

பொறுத்தார் பூமி ஆள்வார். ஆளும் பொறுப்பு உங்களைத் தேடி வர அப்பாவின் ஆசி கனிந்துள்ளது. அதை விட தங்களின் தன்னம்பிக்கையும் தளராத உழைப்புமே மிக மிக உன்னதமென என் மனம் நெகிழ்கிறது. தேர்தல் முடிவு வந்ததுமே சந்தித்து வாழ்த்த நினைத்தேன். ஆனால் எனக்கிருந்த நோயின் அறிகுறி, சளித்தொல்லை காரணமாக தங்களை அசௌகர்யபடுத்த விரும்பாது தவிர்த்தேன்.

தற்போது அதிகாரப்பூர்வமாக தொற்று உறுதியானதால் காலதாமதமின்றின் கடிதம் மூலமாகவாவது வாழ்த்துகிறேன். தமிழ் சமுதாயத்தை சீரமைக்கும் சிறப்பான சேவைப்பணியாற்றிய அப்பாவின் எழுத்தாணியுடன், அன்பு மகனான தாங்கள் அனைத்துத் தமிழ் தாய்மார்களின் சுமை குறைத்து கொரோனா நோயாளிகளின் துயர் துடைக்கும் பொருட்டும் நிறைவான பால் வார்த்துவிட்டீர்கள் குறைவான விலையில். நெகிழ்வாக இருந்தது.

காவல்துறை நண்பர்கள் குறித்தும் கருணையுடன் பரிசீலித்திருக்கிறீர்கள். மகிழ்வு. எனது குடும்பத்தார், பாக்யா குடும்பத்தினர் மற்றும் எழுத்தாளர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகிறேன். நிறைவான ஆட்சி அரங்கேறி நாடு நலம் பெற அய்யாவின் அருள் உடனிருக்கும் என வாழ்த்தி, உங்கள் அன்பு பாக்யராஜ்” என்று இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.