போபால்:
மத்தியபிரதேச மாநிலத்தில், கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வர் கமல்நாத்துக்கும், இளந்தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, காங்கிரசில் இருந்து விலகி, இன்று பாஜகவில் இணைந்துள்ளார் சிந்தியா.
இந்த நிலையில், ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக காரணம் என்ன என்பதை காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் தெளிவுபடுத்தி உள்ளார்.
மாநிலத்தில் துணைமுதல்வர் பதவி கேட்டு சிந்தியா வலியுறுத்தி வந்தாகவும், ஆனால், அந்த பதவியை தனது ஆதரவாளருக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார் என்றும்,அதை கமல்நாத் ஏற்க மறுத்ததால், அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார் என்று பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார்.
மேலும், சிந்தியா ஆதரவாளர்களாக கூறப்படும் 22 கிளர்ச்சி எம்.எல்.ஏக்களில் 13 பேர் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை என்று கூறியவர், கமல்நாத் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மாநில நிலவரம் தொடர்பாக நாங்கள் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம், நாங்கள் தூங்க வில்லை” என்று கூறியவர், சிந்தியா, மாநிலங்களவையில் காங்கிரஸ் வேட்பாளராக இருந்திருக்கலாம், ஆனால் “மோடி-ஷா” மட்டுமே “அதிக லட்சிய” தலைவருக்கு அமைச்சரவை பதவியை வழங்க முடியும் என்று கூறி உள்ளார்.
சிந்தியா விலகலைத் தொடர்ந்து, கமல்நாத் அரசு ஆட்டம் கண்டுள்ளது.