சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டிய தமிழகஅரசு, இதுகுறித்து அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த, விசாரணை ஆணையம் அமைத்தது.

இந்த விசாரணை ஆணையத்தின்  நீதிபதி கலையரசன் பொறுப்பேற்றார். அவரிடம்  குற்றச்சாட்டு குறித்த ஆவணங்கள்  ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஓரிரு நாளில் விசாரணை தொடங்கும் என தெரிகிறது.

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள சூரப்பா, தமிழகஅரசுக்கு தெரியாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகவும், பல்வேறு , ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்ச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, விசாரணை நடத்துவதற்கு, ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.  அத்துடன், சூரப்பா மீது விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து,  விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் பொறுப்பேற்றுக்கொண்டார்.  சூரப்பா மீதான குற்றச்சாட்டு குறித்த ஆவணங்கள் அனைத்தும் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. அலுவலகம் அமைக்கப்பட்டதும் ஓரிரு நாளில் விசாரணை தொடங்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய சூரப்பா,  நான் எந்த விதியையும் மீறவில்லை என்றும், ஒரு பைசா கூட லஞ்சமாக வாங்கியது கிடையாது என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.