சென்னை: ஆன்லைன் ரம்மி தடை குறித்து  தமிழகஅரசு அமைத்த நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவினர், முதலமைச்சர் மு.க.ஸ்டானிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த குறித்து இன்று மாலை நடைபெற உள்ள அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அவசர சட்டம் கொண்டு வரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளால் ஏராளமானோர் பணத்தை இழந்து வருவருடன், பலர் தற்கொலை முடிவை நாடியுள்ளனர். இதனால், இதற்கு தடை விதிக்க வேண்டும் என பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து, தமிழகஅரச ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையிலான குழு அமைத்து, அன்லைன் ரம்பி தடை தொடர்பான சட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கோரியது.

அதன்படி,  ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையிலான குழு தனது அறிக்கையை இன்று முதல்வரிடம் சமர்பித்தனர். இது தொடர்பாக இன்றை அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இது குறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள அடிப்படையிலான விளையாட்டுகளில் பொது மக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டு, அதில் பெருமளவில் பணத்தை இழப்பதுடன், அதன் காரணமாக கடன் தொல்லை மற்றும் கடும் மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர். இதனால் பல்வேறு சமூகப் பொருளாதாரக் குற்றங்களும், தற்கொலைச் சம்பவங்களும் நிகழ்வதை அரசின் கவனத்திற்கு பல்வேறு சமூக அமைப்புகள் கொண்டு வந்தன.

இதனையடுத்து, கடந்த 10ம் தேதி ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு உரிய பரிந்துரைகளைச் செய்திடவும் குழு ஒன்றினை அமைத்திட முதலமைச்சர் ஆணையிட்டார்

இக்குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல் துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே, ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இக்குழு தனது அறிக்கையினை இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரிடம் அளித்தது. இந்த அறிக்கைமீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, இன்று (27ம் தேதி) மாலை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.