சென்னை: தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டுறவு வங்கிகளில் 6சவரன் வரை பெற்ற  நகைக்கடன்கள்  ரத்து செய்யப்படுவதாக  சட்டமன்றத்தில் அதிரடியாக அறிவித்து உள்ளார். மேலும், மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தால், 5 சவரன் வகை  நகைக்கடன்கள் ரத்து , மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கடன் ரத்து என  திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த நிலையில்,  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 6சவரன் வரை நகைக்கடன் ரத்து செய்யப்படுவதாக அதிரடியாக அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் பிப்ரவரி  2 ஆம் தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து, பிப்ரவரி 5ந்தேதி அன்று  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  தமிழக சட்டமன்ற தேர்தலை கவனத்தில்கொண்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, தகூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்வதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக சட்டமன்ற கூட்டத்தொடர் மீண்டும் கடந்த 23ந்தேதி மீண்டும் கூடியது. அதைத் தொடர்ந்து 24, 26, 27ந்தேதி வரை பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரின்போது,  பல்வேறு அறிவிப்புகளை விதி 110ன் கீழ் வெளியிட்ட முதல்வர், இன்று  கூட்டுறவு வங்கிகளில் ஏழை மக்கள் வாங்கிய 6 சவரன் வகையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும், மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கடன்களும் ரத்து செய்யப்படும் என அதிரடியாக அறிவித்து உள்ளார்.