காஞ்சீபுரம்:

மறைந்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர்   உடல்  இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

காஞ்சி சங்கர மடத்தின் 69–வது மடாதிபதியாக இருந்தவர் ஜெயேந்திர சரசுவதி.

82 வயதான இவர் கடந்த சில வருடங்களாவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவ்வப்போது சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வருடம் ஆந்திர மாநிலம் விஜயவாடா சென்ற போதும்

அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காஞ்சி சங்கர மடத்துக்கு வந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், ஜெயேந்திரரின் அறையில் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் ஆகிய இருவரையும் சந்தித்து ஆசிபெற்றார்.

பிறகு ஜெயேந்திரர் இரவு 8 மணி அளவில் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு கருவறையில் அம்மனுக்கு அவர் தீபாராதனை  செய்து வழிபட்டார். .

அப்போது அங்கு வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு ஜெயேந்திரர் ஆசி வழங்கினார். அதன் பிறகு ஜெயேந்திரர், காஞ்சி சங்கர மடத்திற்கு திரும்பினார்.

நேற்று அதிகாலை ஜெயேந்திரருக்கு திடீரென உடல் சோர்வும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.  மாரடைப்பும் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் உடனடியாக காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கல் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை 8.10 மணி அளல் ஜெயேந்திரர் மரணம் அடைந்தார்.

பிறகு அவரது  உடல் மருத்துவமனையில் இருந்து காஞ்சி சங்கரமடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மடத்தில் வழக்கமாக அவர்  பக்தர்களுக்கு ஆசி வழங்கும் அறையில் அவரது உடல் அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டது. அவரது நெற்றி நிறைய விபூதி பூசப்பட்டு, குங்கும பொட்டு வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு துணை முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, இல.கணேசன் எம்.பி., தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன், இசை அமைப்பாளர் இளையராஜா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஜெயேந்திரர் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் ஏராளமான பக்தர்கள் சங்கர மடத்தில் திரண்டனர். து நீண்ட வரிசையில் நின்று அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஜெயேந்திரரின் மறைவையொட்டி, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று காலை 9.30 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

மேலும் காஞ்சி சங்கரமடத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஞ்சீபுரம் ஏனாத்தூரில் இயங்கும் சங்கரா கலை மற்றும் அறிவியியல் கல்லூரி, சங்கரா நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

ஜெயேந்திரரின் உடல் இன்று (வியாழக்கிழமை) காஞ்சி சங்கர மடத்தில் உள்ள பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் சமாதியின் அருகே நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

அவரது உடல் சிம்மாசனத்தில் அமர்ந்த நிலையில் பிரம்பு கூடையில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்படும்.

வேத முறைப்படி ‘பிருந்தாவன பிரவேச காரிய கிரமம்’ என்று அழைக்கப்படும் இறுதிச்சடங்கு காலை 8 மணிக்கு தொடங்கும் என்று காஞ்சி சங்கர மடம் தெரிவித்துள்ளது.