சென்னை:

தமிழக சட்டமன்ற குழு தலைவராக சசிகலாவை அதிமுக எம்எல்ஏ.க்கள் தேர்வு செய்தனர். இதனால் சசிகலா முதல்வராக பதவி ஏற்கவுள்ளார். சசிகலாவுக்கு பல மட்டங்களில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்நிலையில் முன்னாள் சபாநாயகரும் அதிமுக மூத்த நிர்வாகியுமான பி.ஹெச். பாண்டியன் மற்றும் அவரது மகன் மனோஜ் பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ஜெயலலிதா மரணம் குறித்து அவர்கள் குறிப்பிட்ட 10 முக்கிய அம்சங்கள்:

1. ஜெயலலிதா கீழே தள்ளப்பட்டார்

செப்டம்பர் 22ம் தேதி போயஸ் கார்டனில் நடந்த வாக்குவாத்தில் ஜெயலலிதா கீழே தள்ளப்பட்டார். இதை மறைப்பதற்காக ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

2. ஜெ. மரணம் இயற்கைக்கு மாறானது

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஜெயலலிதா இறந்தார் என்று லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே தெரிவித்திருந்தார். ஆனால், அவரது மரணம் இயற்கைக்கு மாறானது. அவர் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளது. அதனால் செப்டம்பர் 22ம் தேதி போயஸ் கார்டன் வீட்டில் இருந்தவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும்.

3. மேலோட்டமான சிகிச்சை விபரங்கள்

ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் அவரது உடல் நலம், அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறை குறித்து அதிமுக மூத்த தலைவர்கள் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் நேற்று மருத்துவமனை நிர்வாகம் அளித்த பேட்டியில், சசிகலா மற்றும் தம்பிதுரை ஆகியோரிடம் தினமும் சிகிச்சை விபரங்களை தெரிவித்ததாக கூறினர்.

4. சசிகலா அழவில்லை

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவலறிந்து டிசம்பர் 5ம் தேதி அதிமுக தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு ஜெயலலிதா மறைவினால் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கவலை பட்டதாக தெரியவில்லை.

5. சசிகலாவும், இறுதி சடங்கும்

ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில் அவரது உடலை சுற்றி ‘மன்னார்குடி மாபியா’ என்று அழைக்கப்படும் சசிகலா குடும்பத்தினர் சுற்றி நின்றதை கண்டு கட்சியினர் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

6. சசிகலா முதல்வர் ஆவதை ஜெயலலிதா விரும்பவில்லை

மனோஜ் பாண்டியன் கூறுகையில், ‘‘சசிகலாவை தமிழ்நாடு முதல்வராக்க விரும்பவில்லை என்று ஜெயலலிதா என்னிடம் கூறியிருந்தார்’’ என்றார்

7. சசிகலாவுக்கு உரிமை இல்லை

‘‘பொதுச் செயலாளராகவும், சட்டமன்ற குழு தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டது சட்டவிரோதம். அவர் முறைப்படி தேர்வு செய்யப்படவில்லை. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குறியவர் எனது தந்தை பி.ஹெச். பாண்டியன். சசிகலா முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர்’’ என்று மனோஜ்பாண்டியன் கூறினார்.

8. சசிகலாவுக்கு ஆதரவு இல்லை

அதிமுக கட்சி தொண்டர்கள் மத்தியில் சசிகலாவுக்கு ஆதரவு இல்லை என்று இருவரும் தெரிவித்தனர்.

9. மக்களுக்காக

1996ம் ஆண்டு சிறையில் இருந்து ஜெயலலிதா வெளியே வந்தபோது அவரது உடமைகள் அனைத்தும் மக்களுக்கு தான் போய் சேர வேண்டும் என்று கட்சியினரிடம் ஜெயலலிதா தெரிவித்தார். அவ்வாறு என்னிடம் ஜெயலலிதா கூறியதை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். அது எனது கடமை என பாண்டியன் தெரிவித்தார்.

10. எதிர்கால திட்டம்

எதிர்காலம் திட்டம் குறித்து ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி அறிவிப்போம் என தெரிவித்தனர். இதேநாளில் தான் தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.