மதுரை: நல்ல பல திட்டங்கள் செயல்படுத்த நல்லாட்சி அமைய மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு அமைச்சர் உதயகுமார் கோயில் கட்டி உள்ளார். கோயில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.

கோயிலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுகவின் இரு பெரும் தெய்வங்களுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தலைவர்களும் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக வாழ்ந்தவர்கள். மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து, மக்களுக்காகவே  பாடுபட்டனர்.

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மக்கள் மனங்களில் தெய்வமாக வாழ்த்து வருகிறார்கள். ஒருமித்த கருத்தோடு நாம் பணியாற்றி சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பெற வேண்டும்.மீண்டும் அதிமுக ஆட்சியமைக்க உறுதி ஏற்போம். எம்ஜிஆர், ஜெயலலிதா பொற்கால ஆட்சி மீண்டும் அமையும் என்று பேசினார்.

தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பேசியதாவது: வட மாநிலத்தில் இருந்து ஆள் பிடித்து வந்தார் ஸ்டாலின். பின்னர் வேல் பிடித்தார். அவரது நாடகம் எடுபடாது. ஆள் பிடிச்சாலும் வேல் பிடிச்சாலும், அவர் ஆட்சியை பிடிக்க முடியாது என்று பேசினார்.