சென்னை:

றைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் தோட்ட இல்லத்தை ‘நினைவில்லமாக மாற்றலாம்; என்று சென்னை மாவட்ட கலெக்டர் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லம் நினைவில்ல மாக மாற்றப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கான நிலம் எடுப்பு அலுவலராக சென்னை மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டு அதற்கான குழு அமைக்கப்பட்டது.

போயஸ் தோட்ட இல்லத்தின் உள்புறத் தோற்றம்

இந்த குழுவினர் போயஸ் கார்டன் பகுதி உள்பட பலரிடம் கருத்து கேட்டு வந்தது. அதைத் தொடர்ந்து, சமூக தாக்க மதிப்பீடு இறுதி அறிக்கை, நிபுணர் குழுவின் பரிந்துரைகள் மற்றும் நிலம் எடுப்பு அலுவலரின் அறிக்கை ஆகியவற்றை பரிசீலித்து சென்னை மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில், ஜெயலலிதா வசித்து வந்த ’வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது நியாயமான மற்றும் பொதுநலன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு. வேதா இல்லத்தை தவிர்த்து நகரத்தின் வேறு பகுதியில் இந்த நினைவு இல்லத்தை அமைப்பது என்பது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானதாக அமையும். இதனால் பொது மக்களின் உணர்வும் பாதிக்கப்படும்.

மேலும் நில எடுப்புக்கு உள்ளாகும் போயஸ் தோட்டத்து இல்லத்தின் மொத்த மதிப்பு 32 கோடியே 9 லட்சத்து 33 ஆயிரத்து 827 ரூபாய் . நிலத்திற்கான மதிப்பு மட்டும் 29 கோடியே 33 லட்சத்து 23 ஆயிரத்து 320 ரூபாய்.

இந்த நில எடுப்பினால் பாதிக்கப்படக்கூடிய நபர்களோ, குடும்பங்களோ எவரும் இல்லை. சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதும் இல்லை. நினைவில்லத்தை காண வரும் மக்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு டி.எம்.எஸ் மற்றும் செம்மொழிப் பூங்கா வளாகங்களில் உள்ள காலி இடங்களை வாகனங்கள் நிறுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ளாம். அதேபோல் போயஸ் கார்டனிலும் ஆன்லைன் மூலம் பார்வையாளர்களை பதிவு செய்து அனுமதிக்கலாம்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாடு மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கு ஒரு முன்மாதிரியான தலைவராக, ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் ஒரு பெண் எந்த அளவுக்கு வெற்றிகரமாக செயல்பட முடியும் என்பதற்கும் எடுத்துக்கட்டாக திகழ்வதால் அவர் வாழ்ந்து மறைந்த வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றுவது என்பது முற்றிலும் பொருத்தமான ஒரு நடவடிக்கை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.