கராத்தே வீரர் ஹூசேனி அதிமுகவில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, விரைவில் குணமடைய வேண்டும் என்று தன்னைத்தானே சிலுவையில் அறைந்துகொண்டவர் ஹூசைனி. மேலும் ரத்தத்தால் ஜெயலலிதா உருவத்தை வரைவது போன்ற செயல்களை செய்துள்ளார்.
இந்த நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஹூசைனி, “மேலும், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது. ஜெயலலிதா மரணம் இயற்கையானது அல்ல. ஜெ.வை இறந்த உடலாக பார்ப்பதற்கு எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
ஜெயலலிதாவிடம் 40 பக்க கடிதத்தை கொடுத்தேன்.  அதில் உங்களை கொல்வதற்கு ஒரு திட்டம் இருக்கிறது.  அதோடு நிறுத்தாமல் தமிழ்நாடு அரசை அவர்கள் கையில் எடுத்துக்கொள்வார்கள். இந்த சசித்திட்டத்தைத் தீட்டியவர் (சசிகலா) நடராஜன் என்றும் சொன்னேன். அதற்கு பிறகு நடராஜனை கைது செய்து சிறையில் வைத்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.
எனது வாக்குமூலம் தமிழ்நாடு போலீசிடம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது,  போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாடு முதலவருக்கே இப்படி நடந்திருக்கையில், நமது நிலை என்ன என்று மக்கள் அஞ்சுகிறார்கள்.
மேலும், நமது முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒரே ஒரு வேண்டுகோள். உங்களை  ஜெயலலிதா இரண்டு முறை முதல் அமைச்சராக ஆக்கினார்கள். அவ்வளவு நம்பிக்கை  உங்கள் மீது. தற்போது முதல்வர் பதவி மீண்டும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.  இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிடக் கூடாது. எந்தக் காரணம் கொண்டும் இந்த அரசை அந்த மன்னார்குடி மாபியா கையிடம் கொடுத்துவிடக் கூடாது. அப்படி நீங்கள் செய்தால் வரலாறு உங்களை மன்னிக்காது” என்று ஹூசைனி தெரிவித்தார்.