சென்னை:

ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலுக்கு விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போல் இருந்த வீடியோவை, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கடந்த 20ம் தேதி வெளியிட்டார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி கொடுத்த புகார் அடிப்படையில், புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஜெயலலிதா மரண விசாரணை கமிஷன் சார்பில் அண்ணா சதுக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரில், ‘‘விசாரணை ஆணையத்தை அவமதிக்கும் விதமாக வெற்றிவேல் வீடியோ வெளியிட்டுள்ளார். தேர்தலுக்கு ஒருநாள் முன்பு, வீடியோவை வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி மோதல் ஏற்பட வெற்றிவேல் வழிவகை செய்துள்ளார்’’ என்று தெரிவித்தது.

இந்நிலையில், வெற்றிவேலுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. வெற்றிவேலிடம் இருக்கும் ஆதாரங்களை அளிக்குமாறு விசாரணை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.