சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகவும், வழிபாட்டுத்தலங்களை மூடவும் தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக  இன்று மாலை புதிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகள்  நடத்தப்படுவதும் கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால்,  அதை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில்  மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன், தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில், உருமாறிய ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு மற்றும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்தும், அதை  கட்டுப்படுத்த மாவட்டம் வாரியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி,  மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதோடு, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புகளை கடுமையாக்குவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்து வதுடன்,  தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் மூடவும் திட்டமிடப்பட்டு உள்ளது. அத்துடன் ஜல்லிக்கட்டு போட்டிகளும் ஒத்தி வைக்கப்படலாம் என தெரிகிறது. இது தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.