ஜெய்ப்பூர்:
பெண் குழந்தை பிறந்தால்,  கள்ளி்ப்பால் கொடுத்துக் கொல்லும் கொடூர வழக்கம் தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்தது பல வருடங்களுக்கு முன் அம்பலமானது. தற்போதும் இப்படிப்பட்ட கொலைகள் நடப்பதாக சொல்லப்படுவது உண்டு. பெரும்பாலும்  படிப்பறிவில்லாத ஏழை குடும்பங்களிலேயே இந்த கொடூரம் நிகழும்.

நேகா
நேகா

ஆனால்  இவற்றையெல்லாம் மிஞ்சிவிட்டது ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த கொடூரம்.  இரண்டாவதும் பெண் குழந்தையாகிப்போனதால், அந்த நான்குமாத பிஞ்சை, 17 இடங்களில் கத்தியால் குத்தி, அறுத்துக் கொன்றிருக்கிறார் ஒரு தாய். படித்த, வசதியான வீட்டுப்பெண்மணி இவர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வசிப்பவர் நேகா நோயல். வயது 35.  திருமணமான இவருக்கு எட்டு வயதில் மகள் இருக்கிறார். மீண்டும் கருவுற்ற நேகாவுக்கு, கடந்த நான்கு மாதம் முன்பு பெண் குழந்தை பிறந்தது.
நேகா...( கொலை செயப்பட்ட) குழந்தை
நேகா…( கொலை செயப்பட்ட) குழந்தை

அப்போதிலிருந்தே நேகா, மன உளைச்சலில் இருந்திருக்கிறார். “இரண்டாவதும் பெண் குழந்தையாகிப்போய்விட்டதே” என்று புலம்பியபடியே இருந்திருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 26ந்தேதியன்று நேகா தனது குழந்தையை காணவில்லை என்று அழது அரற்றியிருக்கிறார். குடும்பத்தினர், குழந்தையை வீ்டுக்குள் தேடியிருக்கிறார்கள்.   வீட்டில் இருந்த பயன்படுத்தப்படாத ஏர்கண்டிசனர் உள்ளே போர்வையால் சுற்றப்பட்டு  கிடந்தது குழந்தை.
அந்த நான்கு மாத குழந்தையின் உடலெங்கும் கத்திக்குத்து காயங்கள். தொண்டை அறுக்கப்பட்டிருந்தது.
வீட்டிலுள்ளோர் உடனே  குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துக்கொண்டு ஓடியிருக்கிறார்கள். ஆனால்,  குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காவல்துறை விசாரணையில், நேகாவே தனது பச்சிளம் குழந்தையை சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியால் 17 இடங்களில் வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொன்றது தெரியவந்தது.
நேகாவின் குடும்பமும் சரி, அவரது கணவர் குடும்பமும் சரி.. வசதி மிக்கது. தானிய வியாபாரம் செய்கிறார்கள்.  இவர் படித்த பட்டதாரிப் பெண்.
அப்படி இருந்தும், பெண் குழந்தை என்றால் கேவலம், ஆண் குழந்தைதான் வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் இரண்டாவதும் பெண் குழந்தையாகப் பிறந்ததால் கத்தியால் அறுத்துக் கொன்றிருக்கிறார்.
குற்றத்தை  முதலில் ஒப்புக்கொள்ள மறுத்த நேகா, ஆதாரங்கள் மற்றும் விசாரணையின் அடிப்படையில் குழந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இந்த கொடூர கொலை குறித்து நேகாவின் கணவர் கூறியதாவது:
சம்பவத்தன்று நேகா,  குழந்தையை காணவில்லை என்று  பதட்டத்துடன் சத்தம் போட்டார்.  நானும், எனது குடும்பத்தினரும் பதறிப்போய் தேடினோம்.  கிட்டத்தட்ட இரண்டு மணி நேர தேடலுக்குப் பிறகு  குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தை கொலை செய்யப்பட்டிருந்ததால்,  இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தோம்.
போலீசார் அனைவரிடமும் விசாரண மேற்கொண்டனர். மேலும் வீடு முழுவதும் சோதனை செய்தனர். நேகா மீது சந்தேகப்பட்டு அவரது படுக்கையறை  மற்றும்  குளியலறையலும் சோதனை நடத்தினர்.  தடயவியல் சோதனையும் செய்யப்பட்டது. குடும்பத்தில் உள்ள அனைவரின் ரத்த மாதிரிகள், ரேகைகள் எடுத்து சோதனை செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் குழந்தையின் மீது இருந்த ரத்தம், தாயின் ரத்தத்துடன் ஒத்துபோனது. மேலும் ரத்தத்தை குளியறையில் சுத்தம் செய்த அறிகுறிகளும் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியுடன் சோதனை செய்யப்பட்டது. இதையடுத்துதான் நேகா குழந்தையை கொலை செய்தது உறுதியானது” என்றார்.
அங்குஷ்மான் போமியா
அங்குஷ்மான் போமியா

இதுகுறித்து ஜெய்ப்பூர் போலீஸ் அதிகாரி அங்குஷ்மான் போமியா கூறியதாவது:
குழந்தையை கொலை செய்தது நேகா என்று ரத்த பரிசோதனையிலும்,  தடயவியல் சோதனையிலும் உறுதி செய்யப்பட்டது. ரத்த மாதிரி குற்றவாளியின் குளியல் அறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையை கொலை செய்ய பயன்படுத்திய கத்தியும் கண்டு எடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் ராஜஸ்தான் மாநிலமே அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறது.