சேலம்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் நாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறை (ஐ.டி.) சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, நாமக்கல் எம்எல்ஏவாக இருந்த கே.பி.பி.பாஸ்கர்மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகார் கூறப்பட்டது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கடந்த ஆண்டு (2022) அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது. அப்போது, கணக்கில் வராத லட்சக்கணக்கான ரொக்கமும், சொகுசு கார்களும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இன்று அவரது நாமக்கல் வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தி வருகின்றனர். அவரது சொத்துகளை மதிப்பிடும் பணி நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாமக்கல் சட்டசபை தொகுதியில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்தவர் கே.பி.பி.பாஸ்கர். தற்போது இவர் நாமக்கல் நகர அதிமுக செயலராக இருந்து வருகிறார். பாஸ்கர் தற்போது லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். அவரது பெயர் மற்றும் அவரது மனைவி பெயர் மேலும் பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் எம்எல்ஏவாக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்ததாகவும், இது அவரது சட்டப்படியான வருமானத்தைக் காட்டிலும் 315 சதவீதம் அதிகம் எனவும் புகார் எழுந்தது.

இந்த நிலையில், வருமான வரித் துறையினர் அவரது வீட்டில் சொத்து மதிப்பீட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.