பெங்களூரு:

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறை விதிகளை மீறியதும், சிறைக்காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு, சிறையில் இருந்து ஷாப்பிங் சென்றதும் உண்மை என்று, இதுகுறித்து விசாரணை நடத்திய  விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலா, அவரது உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  அங்கு அவர்களுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் அளிக்கப்பட்டதாக டிஐஜி ரூபா புகார் கூறியிருந்தார்.

சசிகலாவிடம் ரூ.2 கோடி பணம் பெற்றுக்கொண்டு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், அவ்வப்போது சிறைக்கு வெளியே சென்று  ஷாப்பிங் செய்து வந்ததாகவும், அதற்கு ஆதாரமாக    சசிகலா, இளவரசி ஆகியோர் வெளியே ‘ஷாப்பிங்’ சென்றுவிட்டு சிறைக்கு திரும்புவது போன்ற வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

அதைத்தொடர்ந்து, அப்போதைய  கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக சிறையில் சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள்  பற்றி எழுப்பப்பட்டுள்ள புகார் குறித்து விசாரிக்க உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும், விசாரணை முடியும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டும் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து, சசிகலா சொகுசு சிறை வாழ்க்கை  குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.. அந்த உயர்மட்ட குழுவினர் பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். புகார் கூறிய அதிகாரி ரூபா மற்றும் புகாருக்கு உள்ளான டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் ஆகியோரிடம் வாக்கு மூலம் பெற்றனர்.

இந்த குழு கடந்த விசாரணை குறித்த அறிக்கையை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல் கடந்த குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கிடப்பில் போட்ட நிலையில், தற்போது எடியூரப்பா தலைமையிலான அரசு தகவல்களை கசிய விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை விதிகளை சசிகலா மீறியது உண்மைதான் என்றும் சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறியது உண்மையே என்றும் சிறையில் சலுகைகளைப் பெற சசிகலா லஞ்சம் தந்ததாக வெளியான தகவலும் உண்மையே எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இது கர்நாடக மற்றும் தமிழகத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ஆச்சார்யா உள்பட பலர்,  சசிகலா சிறை விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு மேலும் பல ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சசிகலா சிறை விதிகளை மீறி ஷாப்பிங் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சசிகலா வின் சிறை தண்டனை மேலும் சில ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.