சென்னை: ஒருவரின் அனுமதி, ஒப்புதல் இல்லாமல் படம் பிடிப்பது சமூக குற்றம், அநாகரிகம். படம்பிடித்தவரை கைது செய்திருக்க வேண்டும் என்றும்,  உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான  ராவணன் குடிலில் இன்று அக்கட்சி சார்பில் ‘மாயோன் பெருவிழா’ நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் கலந்துகொண்ட  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அங்குள்ள மாயோன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘மாயோன் பெருவிழா’ குறித்து பேசியதுடன், மாயோன் ஆயர் குல தலைவனாக, இறைவனாக இருந்தவர் . ஐநிலங்களாக பகுத்து வாழ்ந்த தமிழர்களின் மாயோன்  கண்ணன், பெருமாள்,  கிருஷ்ணர் ஆகிவிட்டார். மால் என்றால் கருப்பு, மாயோன் என்பது கருமேகம் என்று பொருள். மாயோன் மேய காடுறை உலகு என்று தொல்காப்பியம் கூறுகிறது என்று விவரித்தார்.

பின்னர் நடப்பு நிகழ்வுகள் குறித்து பேசிய சீமான்,  பிறந்தநாள்களை கொண்டாடும் வழக்கு தமிழர்களுக்கு இல்லை, அதனால்தான்  முன்னோர் களின் இறப்புக்கு மட்டுமே சுவரொட்டி ஒட்டுகிறோம், தற்போது சென்னையில், பேனர் வைக்கக்கூடாது என்பதால், சுவரொட்டி ஒட்டுகிறார்கள் இதுமட்டுமின்றி, சுவர்களில்  விளம்பரம் எழுதுகிறார்கள். இதுதான் சிங்காரச்சென்னையா? நெகிழிக்கு தடை என்றார்கள், ஆனால், நெகிழி எங்கும் காணப்படுகிறது, தாய்மார்கள் இடுப்பில் பிளாஸ்டிக் குடம்தான் இருக்கிறது.நெகிழி பயன்பாட்டை தடுக்காமல் சிங்காரச் சென்னை எப்படி உருவாகும்….? சென்னையில்  சாலைகள் சவக்குழி போல இருக்கிறது அதை செய்ய வேண்டும் என்றார்.

பாஜக கே.டி.ராகவன் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தவர்,  ஒருவரின் அனுமதி, ஒப்புதல் இல்லாமல் படம் பிடிப்பது சமூக குற்றம், அநாகரிகம். படம்பிடித்தவரை கைது செய்திருக்க வேண்டும். உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார் என்று அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்,  சட்டசபைக்குள் ஆபாச படம் பார்ப்பது தவறு என்று சொல்லலாம். ஒருவர்  தனிப்பட்ட முறையில் அறையில் பேசுவதை படம் பிடிக்கிற அளவு  கேடுகெட்ட சமூகமாக மாறி விட்டது, ஒட்டு கேட்பது , பதிவு செய்து வெளியிடுவதால் என்ன சாதிக்க முடியும். ஒருவரின் அனுமதி இல்லாமல் ஆடியோ , வீடியோவை படம் பிடிப்பது தவறு. அதை ஏன் பார்க்க வேண்டும், தனது வீடியோவை பாருங்கள் என்று அவரா பார்க்க சொன்னார்? என கேள்வி எழுப்பினார்.

நதியில் வெள்ளம் , கரையில் நெருப்பு நடுவினில் இறைவன் சிரிப்பு என்று பன்னீர் செல்வம் தனது நிலையை சட்டமன்றத்தில் கவிதையாக கூறியுள்ளார். என் மக்கள் குடிசையில் படுத்தபோதேனும் உயிருக்கு உத்தரவாதம் இருந்தது. குடிசை மாற்று வாரியம் கட்டிய வீட்டில் அதுவும் இல்லை. சுவரை தொடுவதே தவறு போல் ஆகிவிட்டது.

மேம்பாலம் கட்டும்போதே இடிகிறது. 5லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் ஏற்பட காரணம் என்ன?

இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்பதை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றியுள்ளனர். பெயர் மாற்றம் மட்டும் போதாது.  இதேபோல்தான் சைவர், மாலியத்தை பின்பற்றிய தமிழர்களை இந்துக்கள் என்றார்கள்.

இந்து சமய அறநிலையத்துறையை தமிழர் சமய அறநிலையத்துறை என பெயர் மாற்ற வேண்டும். திருப்பதி, ஐயப்பன் கோயில் மீட்க வேண்டும் 7 பேர் விடுதலை தொடர்பாக 30 ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தை மீண்டும் முதல் புள்ளியில் கொண்டுபோய் நிறுத்தி விட்டார்கள்.

செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பதாக வந்த செய்தியை கவலையாகவே பார்க்கிறேன். இரவில் தானாகவே மக்கள் அடங்கி விடுவார்கள்,  கேரளாவில் இரவில் ஊரடங்கு போடுவதாக கூறியது நகைச்சுவையாக இருக்கிறது. அரசு கொரோனா தடுப்பு பணியை சரியாகவே செய்கிறது. மா.சுப்பிரமணியன் நன்றாகவே இயங்குகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

சீமான்மீது ஏற்கனவே நடிகை விஜயலட்சுமி சர்ச்சைக்குரிய வகையிலான வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.