டில்லி

நாளை நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்குவதை நேரடியாக ஒளிபரப்ப உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

ரஷ்ய நாட்டின் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் ‘லூனா-25’ திட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது. இந்த ‘லூனா-25’ விண்கலம் நிலவில் மோதி நொறுங்கிவிட்டது. இந்தியாவின் ‘சந்திரயான்-3’ விண்கலத்துக்கு முன்பாக நிலவில் தரையிறங்கும் ரஷ்யாவின் முயற்சி நிறைவேறவில்லை. ரஷ்யா தவறவிட்டதை ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் மூலம் சாதித்துக் காட்ட இஸ்ரோ தயாராகி வருகிறது.

நாளை  மாலை 5.27 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் இறங்க உள்ளது, ‘விக்ரம் லேண்டர்’ நிலை மற்றும் தயார்நிலை குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் இஸ்ரோ தலைவர் சோமநாத் விளக்கம் அளித்தார். அவர் அடுத்த 2 நாட்களுக்கு ‘சந்திரயான்-3’-ன் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று கூறினார்.

இஸ்ரோ நிலவு வட்டப்பாதையில் சுற்றிவரும் ரோவர், லேண்டரின் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து லேண்டர், அபாயத்தை கண்டறிதல் மற்றும் தவிர்ப்பு கேமரா மூலம் நிலவின் தென்துருவத்தில் எடுத்த புகைப்படங்களை தொடர்ந்து அனுப்பி வருகிறது.

‘விக்ரம் லேண்டர்’, ‘சந்திரயான்-2’ விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட ‘ஆர்பிட்டர்’ உடன் இருவழி தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. அர்பிட்டர் லேண்டரை வரவேற்கும் விதமாக அதற்கு, ‘வருக, நண்பா!’ என்ற செய்தியை அனுப்பியுள்ளது.

இந்த ஆர்பிட்டர் மட்டுமல்லாது, பெங்களூரு அருகே பயலாலுவில் உள்ள இஸ்ரோவின் இந்திய ஆழ் விண்வெளி நெட்ஒர்க் அமைப்புடனும், ரோவருடனும் தொடர்பு கொள்ளும் திறனை ‘விக்ரம் லேண்டர்’ கொண்டிருக்கிறது.

இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் ‘சந்திரயான்-3’-ன் ‘விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்குவதை மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்வகையில், லேண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் காணலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

நாளை  மாலை 5.27 மணி முதல் நேரலை ஒளிபரப்பு தொடங்கிவிடும். இது இஸ்ரோ இணையதளம் (https://www.isro.gov.in/), யூடியூப், இஸ்ரோவின் முகநூல் பக்கம் (https://www.facebook.com/ISRO/) மற்றும் டிடி தேசிய டிவி. சேனல் உள்ளிட்டவற்றில் இது நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.