டெல்லி: நுபுர்சர்மாவிற்கு எதிராக இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டம் பல இடங்களில் வன்முறையை ஏற்படுத்திய நிலையில், மாநில அரசுக்ளுக்கு மத்தியஅரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளது.

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் பல இடங்களில் வன்முறைக்களமாக மாறியது.  உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா, ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி உள்பட பல ட பகுதிகளில் இஸ்லாமியர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசுவதும் பாதுகாப்பு படையினர் போராட்டத்தை கலைப்பதற்காக கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் போராட்டத்தை ஒடுக்க முயற்சி செய்தனர். ராஞ்சியில் நடந்த போராட்டம் வன்முறையான நிலையில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் உள்பட 2 முஸ்லிம்கள் இறந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்தியஅரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.  போராட்டம் பெரிய அளவில் பரவாமல் இருக்கவும், சட்டம் ஒழுங்கை காக்கவும் மாநில அரசுகள் தேவையான நடவடிக்கையை விழிப்புடன் மேற்கொள்ளவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

நூபுர் ஷர்மாவை கைது செய்யக் கோரி பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் – வன்முறை…!