கோவை,

சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் ஈஷா மையத்தில் உள்ள குளத்தில் நீராடியபோது மர்மமான முறையில் மரணம் அடந்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ஈஷா மையத்தில் உள்ள சந்திரகுண்டம், சூரியகுண்டம் போன்றவற்றில் பாதரசம் கலப்பதாகவும், இதன் காரணமாக அதில் குளிப்பவர்கள் ஒருவித மனநோயாளியாக மாறி, அங்கேயே தங்க விரும்புவதாகவும் சர்ச்சைகள் உள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட பொறியியல் கல்லூரி மாணவர், ஈஷா மையத்தில் உள்ள தீர்த்த குளத்தில் நீராடியபோது, உயிரிழந்தார். வேலூரில் உள்ள ஜி-டெக் கல்லூரியில் 3-ம் ஆண்டு சிவில் என்ஜியரீங் படித்து வந்தவர் ரமேஷ். இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் கன்னியாபுரம் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியாகும்.

பாதரசம் கலக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சூரிய குண்டம் தீர்த்த குளம்

இந்த கல்லூரியில் இருந்து, 30 மாணவர்கள் கொண்ட குழு, கோவை மற்றும் நீலகிரிக்கு சுற்றுலா சென்றது. அதன் ஒரு பகுதியாக வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஈஷா மையத்துக்கு சென்றனர். அங்கு உள்ள  சூரிய குண்டம் என்றழைக்கப்டும் தீர்த்த குளத்தில் நீராடியுள்ளனர். அப்போது, மாணவர் ரமேஷுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

அவரை உடனடியாக குளத்தில் இருந்து மீட்டு, ஈஷா மைய ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். தொடர்ந்து அவரை  கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு எடுத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்தனர்.

கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரமேஷை பரிசோதித்த மருத்து வர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து இறந்த மாணவரின் உடல் போஸ்ட்மார்ட்டத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஈஷாவில் குளித்த மாணவர் திடீர் என வலிப்புக்கு ஆளாகி மரணமடைந்தது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இறந்த மாணவர் ரமேஷ்

இந்நிலையில், மாணவர் சாவு குறித்து ஈஷா மையம் விளக்கம் அளித்துள்ளது. அதில்,  தீர்த்த குளத்தில் வலிப்பு, இதய நோய், ரத்த அழுத்தம், காயம் உள்ளிட்ட பிரச்சனை இருப்பவர்கள் நீராடக்கூடாது என எச்சரிக்கை பலகை வைத்துள்ளதாகவும், அதையும் மீறி மாணவர் நீராடியதே உயிரிழப்புக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆலாந்துறை போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஏற்கனவே ஈஷா யோகா மையம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் உலா வரும் வேளையில், தற்போது மாணவரின் மரணம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன்மூலம் சூரியகுண்டம், சந்திர குண்டம் குளத்தில் பாதரசம் கலப்பது உறுதியானதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஏனென்னறால் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல பத்திரிகை அதிபர் ஒருவர் ஈஷாவின் ஈர்ப்பு காரணமாக தனது மனநிலை தடுமாறி தனது நிறுவனத்தையே மற்றொரு நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டு சில மாதங்கள் ஈஷாவே கதி என்று அங்கே கிடந்தது குறிப்பிடத்தக்கது.