ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் “2.0” படம் இப்போதைக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷ்ய்குமார், எமி ஜாக்‌ஷன் நடிக்கும் 2.0 படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. 3டியில் தயாராகும் இந்த படம் உலகம் முழுவதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளறியுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கிராபிக்ஸ் காட்சிகள் உள்பட போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

 

இது வரை பலமுறை, இப்போது ரிலீஸ், அப்போது ரிலீஸ் என்று சொல்லப்பட்டாலும், வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இடையில் வரும் ஏப்ரல் மாதம் ரஜினியின் காலா வெளியாகிறது. அதோடு அவரது அடுத்தப்பட அறிவிப்பும் வெளியாகிவிட்டது. (சன் பிக்சர்ஸ் தயாரிப்பு.)

இன்னொரு பக்கம், 2.0 படத்தின் இயக்குநர் ஷங்கர், அடுத்ததாக கமலை வைத்து இந்தியன் 2 படத்தை அறிவித்துவிட்டார்.

2.0 படத்தில் அக்‌ஷ்ய்குமார்,  பல வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு பிரபல நடிகர் விக்ரம் பின்னணி குரல் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. சில காட்சிகளுக்கு பின்னணி கொடுத்த அவர், அடுத்தடுத்த காட்சிகள் தயாராகாமல் போகவே வேறு படத்தில் பிஸியாகிவிட்டார்.

இப்படி 2.0 படத்தில் பங்குபெற்ற முக்கியமானவர்கள் எல்லோரும் அடுத்தடுத்த பணிகளில் ஈடுபட, அந்தப் படம் மட்டும் அந்தரத்தில் நிற்கிறது.

இதற்குக் காரணம், கிராபிக்ஸ்.

படத்தில் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ்தான். பிரம்மாண்டமான கிராபிக்ஸ். இந்த பணியை, சீன நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்தார் ஷங்கர். இதற்கு 70 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

அந்த நிறுவனத்துக்கு ஏற்பட்ட வேறுபல பிரச்சினைகளால் சிக்கல் ஏற்படவே இந்தப் பணி பாதியில் நின்றுவிட்டது. இப்போது கிராபிக்ஸ் பணிகள் பல்வேறு இந்திய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  திடுமென புதிதாக ஆட்களைவைத்து கிராபிக்ஸ் பணிகளை செய்ய இருப்பதால் பணிகள் தாமதமாகிறது. இந்தப்பணிகள் முடிய பத்து மாத காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. ஆகவே இப்போதைக்கு 2.0 படம் வருமா என்பது பெரும் கேள்விக்குறியாகி இருக்கிறது.