டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுகவை சேர்ப்பது பற்றி அதிமுக தலைவர்களான எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் தான் முடிவு செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளரும்,  தமிழக பொறுப்பாளருமான சி.டி. ரவி கூறி உள்ளார்.

டெல்லியில் இன்று  பாஜக பொறுப்பாளர் வி.டி. ரவி முன்னிலையில் டெல்லி மாநில தேமுதிக முன்னாள் மாநிலச் செயலாளரும், அதிமுகவின் முக்கிய பிரமுகருமான வி.என். தட்சிணாமூர்த்தி பாஜகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் சி.டி. ரவி  பேசியதாவது:

தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையில் இணைந்து போட்டியிட ஏற்கெனவே பாஜக முடிவு செய்துள்ளது.மேலும், கூட்டணியில் தமிழகத்தில் அதிமுகதான் பெரிய கட்சி. பாஜக சிறிய கட்சி.

முதல்வர் பழனிசாமியும் ஓ. பன்னீர்செல்வமும் அனுபவம் மிக்க அரசியல் தலைவர்கள். கூட்டணியில் அமமுகவும் இடம் பெறுமா, இல்லையா என்று அவர்கள்தான் முடிவு எடுப்பார்கள்.அவர்களுக்குத்தான் சசிகலா – தினகரன் ஆகியோரின் பலம் பற்றி நன்றாகத் தெரியும். அவர்கள் முடிவு செய்வார்கள் என்றார்.