மத்தியபிரதேச முதல்-அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அங்குள்ள சிதி என்ற நகருக்கு சென்றார்.

இரவில் அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார், மனிதரை கொசுக்கள் தூங்கவிடவில்லை.

விடிய விடிய கொசு அடித்து களைப்பானார், சவுகான். மறுநாள் காலையில் கோபத்துடன் போபால் கிளம்பி சென்று விட்டார். மூத்த அதிகாரிகளுக்கு ‘டோஸ்’ விழுந்துள்ளது.

அந்த விருந்தினர் மாளிகை, பொதுப்பணித்துறையின் பொறுப்பில் உள்ளது. அங்கு பணியாற்றும் பொறியாளர் தேவேந்திர குமாருக்கு மேலிடத்தில் இருந்து நோட்டீஸ் போய் உள்ளது.

“முதல்வரை இப்படியா அவஸ்தைக்கு உள்ளாக்குவது? உங்கள் சம்பள உயர்வை 2 ஆண்டுகள் ஏன் நிறுத்தி வைக்கக்கூடாது?” என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

அதிர்ந்து போன பொறியாளர், விருந்தினர் மாளிகை ஊழியர்களை விளாசி தள்ளி விட்டார்.

“முதல்வர் தங்க போகிறார் என்பது முன் கூட்டியே தெரியாது” என ஊழியர்கள் புலம்புகின்றனார்.

– பா. பாரதி