கோவை: நடிகர் ரஜினிகாந்த் என்ன அரசியல் தலைவரா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் எப்போது என்பது குறித்து தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடும்.

லோக்சபா தேர்தலில் இருந்த கூட்டணியே உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பது இடைத்தேர்தல் வெற்றி மூலம் நிரூபணமாகி இருக்கிறது.

தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை என்று யார் சொன்னது?  ரஜினிகாந்த் என்ன அரசியல் கட்சித்தலைவரா? அவர் ஒரு நடிகர் தான்.

தமிழக அரசியலில் வெற்றிடம் என்று அவர் சொன்னதை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்தி இருக்கின்றன. வெற்றிடம் குறித்து அரசியல் தலைவர்கள் யாரும் சொல்லவில்லையே?

அதிமுகவில் இணைவது குறித்து அமமுக புகழேந்தி கடிதம் கொடுத்தால், அது குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும். மத்திய மாநில அரசு இணைந்த மாமல்லபுரத்தை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.