ணக்கமுங்க.. நான்தான் ரவுண்ட்ஸ்பாய் பேசுரேன். கொஞ்ச  நாளாவே சோறு தண்ணி, அன்ன ஆகாரம் இல்லாம கெடக்கேன். “என்னடா, ரவுண்ட்சு ஆளே பாதியா ஆயிட்டே..”னு ஆளாளுக்கு துக்கம் விசாரிக்கிறாங்க.

எல்லாத்துக்கும் காரணம் நம்ம கமலண்ணன்தான். யாரா.. நம்ம நடிகர் கமல்ஹாசன்தான்!

படத்துல நடிச்சு பேரு வாங்கினதவிட, பிக்பாஸ்ல நடிச்சு பேர் வாங்கினதவிட..  ஏழெட்டு வரி ட்விட்டுகள போட்டு படா பேரு வாங்கினவரு.

எதெதுக்கெல்லாமோ கருத்து சொல்லி,  அது நமக்கு புரியாட்டியும்கூட கவனிக்க வச்சாரு.

ஆனா இப்போ எவ்வளவு முக்கிய விவகாங்க நடந்திருக்குது.. மனுசன் வாயே.. ஸாரி.. ட்விட்டரையே திறக்க மாட்டேங்கிறாரே..

சேகர் ரெட்டி டைரியில அமைச்சருங்க பேரு, அதே மாதிரி போலி டைரி போட்டு ஊடகருங்க பேரைச் சேர்த்து வெளியிட்ட அதிமுக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலு.. இதையெல்லாம் விட.. குமரிப் புயல். அது எத்தனை சோகம்..?

இதுக்குக் கூட மனுசன் ஒரு ஆறுதல் ட்விட் போடலையே.. , விஸ்வரூபம் 2 பட சூட்டிங்ல மூழ்கிட்டாரோ?

குத்து மதிப்பா நாலஞ்சு நாளுக்கு ஒரு தபாவாவது ராத்திரி ட்விட்டுவாரு. நமக்கும் அதுகளைப் படிச்சு படிச்சு ஒருவித போதை ஆயிடுச்சு.

இப்ப கொஞ்சநாளா அவரு ட்விட்டுறது கிடையாதா.. கைகால் எல்லாம் ஆடுது.. சாப்பிட முடியல.. தூங்க முடியல..!

நமக்கு பெரிய மனுசங்க சில பேரை தெரியும். அதுல ஒருத்தரு, பத்திரிகையாளரு.. கவிஞரு  மன். முருகன்.

கமல் சார்.. துப்பாக்கிய இந்த ரவுண்ட்ஸ்பாய் பக்கம் திருப்பிராதீங்க..

அவருகிட்ட என் சோகத்தைச் சொல்லி கதறுனேன்.

“விடுறா ரவுண்ட்சு. உன்னமாதிரித்தான் வெகு பயலுக, கமல் ட்விட்டுகளைப் படிக்காம மெர்சலாயி கெடக்குறானுங்க போலிருக்கு. என்னால முடிஞ்ச உதவி ஒன்னு செய்யறேன்.

“இத்தனை நாள் ஏன் ட்விட்டலை”னு கமல்கிட்ட கேட்டா, அதுக்கு பதில் சொல்லி எப்படி அவரு ட்விட்டுவாரோ.. அதே மாதிரி எழுதித்தர்றேன். கைகால் நடுக்கம் வர்றப்ப எல்லாம் படிச்சுக்கோ.. சரியாயிரும்”னு சொன்னாரு.

நம்ம மன்.முருகன் சார் எழுதிய காமெடி ட்விட்

“ஆகா.. ரொம்ப நன்றின்னா…”ன்னு நெகிழ்ந்து போயி அவரு கையை புடிச்சு தேங்க்ஸ் சொன்னேன்.

இதோ பத்திரிகையாளர், கவிஞர் மன்.முருகன், “கமலா மாறி” எழுதின ட்விட்:

“நான் சுட்ட வில்லை என்கிறர்; என் சுட்டு தீச் சுட்டல்ல.

கூற்றின் கூற்றே கூற்றுவன் ஆகுமோ? கூற மால் இருப்பதனால் குற்றம் சுகமோ?

வென்றிடினும் தின்றிடினும் என்றிடினும் இப்பூவுலகில் உண்டோ நிலைத்து யாம்; யாவரும்

 

மெய்ப் பேசுதல் ஏசுதலாகிறது

தூற்றுவோர் தூற்றிடினும் பேசுதல் எம் அறம்

அறம் பிழைத்தோராகுக எம்மக்கள்

ஆட்சிச் சக்கரத்தில் ஆரமில்லை;  தறிகெட்டோடினால் சகதி காண்

யார்க்குரைத்ததோ இல்லையோ உரைத்தோர்க்குரைக்கட்டும்

கனியும் நாளை காய்க் கவராது கத்திருப்போம்

  • படிச்சு பாத்து நெகிழ்ந்து போயிட்டேன்.

கமல் ட்விட்டுற மாதிரியே இருந்துச்சு. வேணும்னே  “கூறாமல்” அப்படிங்கிறத, கமல் மாதிரியே “கூறமால்”னு எழுத்துப்பிழையோட வேற கொடுத்துட்டாரு மன். முருகன் சாரு.

கமல் சார்.. வேணும்னா இந்த ட்விட்டைக்கூட அப்படியே நீங்க எடுத்துக்கலாம்!

நம்ம செய்திகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்யும் சில   இணைய இதழ்கள் கவனத்துக்கு…  இது கமல் எழுதியது அல்ல.. நம்ம மேட்டரை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ற மாதிரி இதையும் காப்பி பேஸ்ட் பண்ணுங்க.. அது உங்க வழக்கம். ஆனா அவசரத்துல கமல் ட்விட்னு போட்றாதீங்க..