டில்லி

ற்போது இன்னொரு மகாபாரதப் போர் நடக்க வேண்டுமா  என ரஜினிகாந்த்துக்கு அசாதுதின் ஓவைசி வினா எழுப்பி உள்ளார்.

கடந்த வாரம் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை விலக்கிக் கொண்ட மத்திய அரசு அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசமாகப் பிரித்தது. அத்துடன் லடாக் பிரதேசத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இந்த நடவடிக்கைக்குப் பல  எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை எதிர்த்து தீர்மானங்கள் இயற்றி உள்ளன.

சென்ற ஞாயிறு அன்று நடந்த ஒரு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், ”காஷ்மீர் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். மிக முக்கியமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அமித்  ஷாவும் மோடியும், கிருஷ்ணனும் அர்ஜுனனும் போன்றவர்கள். ஆனால் யார் அர்ஜுனன், யார் கிருஷ்ணர் என்று நான் கூற மாட்டேன்” எனத் தெரிவித்தார்.

இந்த கருத்துக்கு பாஜக ஆதரவாளர்கள் பெரிய வரவெறுபு அளித்து வருகின்றனர். அத்துடன் ஒரு சிலர் புராண கதாபாத்திரங்களை அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டதை விமர்சித்துள்ளனர். ஒரு சிலர் மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் என்றால் இவர்கள் எந்த மண்ணுக்காக போராடுகின்றனர். மேலும் இதில் கர்ணன் யார் எனவும் கேள்விகள் எழுப்பினர்.

இந்நிலையில் இஸ்லாமியக் கட்சியான ஐமிம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி, “ஒரு தமிழக நடிகர் அமித்ஷாவும் மோடியும் கிருஷ்ணன் மற்றும்  அர்ஜுனன் எனப் புகழ்ந்துள்ளார். அமித் ஷா மற்றும் மோடி கிருஷ்ணன் அர்ஜுனனாக இருப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. என் கேள்விகள் எல்லாம் தற்போது பாண்டவர்கள் யார். கௌரவர்கள் யார், தற்போது இன்னொரு மகாபாரதப் போர் தேவையா” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஓவைசியின் இந்த கேள்விகள் வலைத்தளத்தில் பதியப்பட்டு வைரலாகி வருகிறது. பலரும் ரஜினிகாந்த் இடம் அசாதுதீன் ஓவைசி சரியான கேள்வி கேட்டுள்ளதாகப் பின்னூட்டம் இட்டுள்ளனர். ஆனால் பாஜக ஆதரவாளர்கள் மற்றும் ரஜினிகாந்த்  ரசிகர்கள் ஓவைசிக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.