சென்னை : 

ள்ளி மாணவர் கைகளில் கட்டுப்பட்டு உள்ள கலர் கலர் கயிறுகள் சாதிய பாகுபாட்டை  தெரிவிப்பதாகவும், அதை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க  பள்ளிகளுக்கு  தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

சமீப காலமாக மாணவர்களின் கைகளில் கலர் கலராக கயிறுகள் கட்டப்பட்டு வருவது அதிகரித்து உள்ளது. இதை மாணவர்கள் விளையாட்டுக்காகவும், அழகுக்காகவும் கட்டுவதாக அறியப்பட்டு வந்த நிலையில், இந்த கயிறுகள் சாதி ரீதியிலாக கட்டப்பட்டு வருவதாகவும்  கூறப்படுகிறது. சில பள்ளிகளில், பள்ளி நிர்வாகமே இதுபோன்ற கலர் கயிறுகளை கட்ட அறிவுறுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

தமிழ்நாட்டிலுள்ள ஒருசில பள்ளிகளில் மாணவர்கள் விதவிதமான நிறங்களில் கையில் கயிறுகள் கட்டி உள்ளனர். குறிப்பாக அவை மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் காவி ஆகிய நிறங்களில் கயிறுகள் கட்டியிருக்கின்றனர். இந்தக் கயிறுகள் மூலம் மாணவர்களின் ஜாதிகள் கண்டுபிடிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் சார்பில் பள்ளிக்கல்வி துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  ‘சாதி ரீதியிலான பாகுபாடு பார்க்கும் பள்ளிகளை கண்டறிந்து, அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு நடக்கும் பள்ளிகள் குறித்து, பள்ளிக் கல்வி துறையின் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி பள்ளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்று நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும்  மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.