பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று முகநூலில் பதிவிட்ட  பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா மீது  வழக்குப் பதிவு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கை தொடுத்திருப்பவர் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர் ஜெயரட்சகன்.   இவரது சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் வழக்கறிஞர் துரை அருண்.

இந்த நிலையில் சட்டப் பிரிவுகளின்படி ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதற்கான முகாந்திரங்கள் தெளிவாக இருப்பதால் ராஜா மீது காவல்துறையில் வழக்கு பதியும் சூழல் ஏற்படக்கூடும்  என்று இருப்பதாக வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து வழக்கு தொடுத்துள்ள ஜெயரட்சகன் தரப்பில் தெரிவிப்பதாவது:

“பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடித்ததில் இருந்தே, எச்.ராஜா பேச்சுக்கள் சமூகத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று ராஜா பதிவிட்டதை அடுத்து, திருப்பத்தூரில் பெரியார் சிலை தாக்கப்பட்டது. ஆகவே அப்போதே அவர் மீது விழுப்புரம் மாவட்டம் கண்டமங்களம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால் காவல்துறை தரப்பில்  சி.எஸ்.ஆர். நகல் அளித்தார்களே தவிர,  அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதையடுத்து மார்ச் 8ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அப்போதும் நடவடிக்கை ஏதும் இல்லை.

இந்த நிலையில்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ (இரு தரப்புக்கு இடையே வன்முறையைத் தூண்டும்படி பேசுவது, எழுதுவது), 506/1,2 குற்றமுறு மிரட்டல் விடுத்தல், 66 ஏ தகவல் தொழில் நுட்பச் சட்டம் (2000) ஆகிய சட்டப் பிரிவுகளின்படி ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது . இந்த சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் ராஜா மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்படுகிறது.