சென்னை,

திமுகவை சேர்ந்த சிலருக்கு மத்திய அமைச்சரவையில் பதவி வழங்கப்படுகிறது என்றும், இதற்காக மோடி ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

இந்நிலையில், அதிமுக, மத்திய பாரதியஜனதா அமைச்சரவையில் இடம்பிடிக்கிறதா என்று தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, மத்திய அமைச்சரவையில் சேரும் திட்டம் எதுவும் இல்லை என அதிமுக அமைச்சர் ஜெயக்குமர் பதில் அளித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறுதி வரை எதிர்ப்பு தெரிவித்து வந்த , ஜிஎஸ்டி, உதான் மற்றும் பொது மக்களுக்கு எதிரான மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு அதிமுக அரசு தொடர்ந்து ஆதரவு  கொடுத்து வருகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும், நடைபெற இருக்கும் துணைஜனாதிபதி தேர்தலிலும் அதிமுகவின் 3 அணிகளும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்து மத்தியஅரசின் காலில் மண்டியிட்டு வருகிறது.

அதிமுகவின் அதீதமான கரிசனம் காரணமாக, அதிமுகவை சேர்ந்த ஒருசிலருக்கு மத்திய அரசில் பதவி வழங்கலாம் என பாரதியஜனதா தீர்மானித்துள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன.

சமீபத்தில் நிதிஷ்குமாரின் அரசில் குழப்பத்தை விளைவித்து,  அதிரடி மாற்றத்தை ஏற்படுத்திய பாரதியஜனதா தற்போது குஜராத் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் குழப்பம் விளைவித்து வருகிறது.

இந்நிலையில், தற்போது 3 பிரிவுகளாக உள்ள அதிமுகவிலும் கலகத்தை தொடங்கி உள்ளது. ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தீவிர பாரதியஜனதா விசுவாசியாக மாறிவிட்ட நிலையில், எடப்பாடியும் அவருக்கு நான் சலைத்தவன் அல்ல என்று போட்டிப்போட்டுக் கொண்டு பாரதியஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், டிடிவி தினகரன் வரும் 5ந்தேதி, அதிமுக தலைமை கழகத்துக்கு வருமாறு, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பரபரப்பான இந்த சூழ்நிலையில், அதிமுகவினருக்கு மத்திய அரசில் வாய்ப்பு கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அப்படி கொடுக்கப்பட்டால் யாருக்கு பதவி கிடைக்கும் என எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

இதன் காரணமாக அதிமுகவை சேர்ந்த ஒருசில எம்.பி.க்கள் மத்திய அமைச்சர் கனவில் மிதப்பதாகவும் கூறப்படுகிறது.

50 எம்.பிக்களை கொண்ட அதிமுக, பாராளுமன்றத்தில் பாரதியஜனதா, காங்கிரசுக்கு அடுத்த 3வது பெரிய கட்சியாக உள்ளது. ஆனால் கட்சிக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக, 50 எம்.பிக்கள் இருந்து தமிழகத்துக்கு எந்தவித நன்மைகளையும் பெற்றுதர முடியாத நிலையில், இவர்கள் அமைச்சர் களாக பதவ ஏற்று என்ன செய்யப்போகிறார்கள் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள.

இன்னும் இரண்டு ஆண்டில் பாராளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், அதிமுக பாரதியஜனதா கூட்டுடன் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட லாம் என்றும் டில்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.