டெஹ்ரான்: தனது நாட்டு வான் எல்லைக்குள் ஊடுருவிய அமெரிக்க ராணுவத்தின் உளவு டிரோனை சுட்டு வீழ்த்திவிட்டதாக தெரிவித்துள்ளது ஈரான்.

ஆனால், சர்வதேச வான் எல்லையில் பறந்த தங்களின் டிரோனை விதிமுறைகளை மீறி ஈரான் சுட்டு வீழ்த்திவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளது அமெரிக்கா. இந்த சம்பவம் அப்பகுதியில் இன்னும் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்தியக் கிழக்குப் பகுதிக்கு இன்னும் கூடுதலாக 1000 அமெரிக்கத் துருப்புகளை அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டிரம்ப். கடந்த வாரம், இரண்டு எண்ணெய் டாங்கர்களை தாக்கியதாக ஈரான் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட RQ-4A Global Hawk என்ற பெயருடைய அந்த டிரோன், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில், சர்வதேச வான் எல்லையில் பறந்துகொண்டிருந்ததாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.